நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை முடித்து, நடிகர்கள் சென்னை திரும்பியுள்ள சூழலில், நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருக்கிறார். தன்னுடைய ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது:
நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை, ஆலோசனைகள், வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.
குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோடை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகரைப் பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமே இல்லையென்று விஷாலும் கார்த்தியும் சொன்னார்கள். ஆனால் உடனடியாக வழக்கும் ஸ்டேயும் வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த 18 கிரவுண்டுக்கும் அந்த ரோடுக்கும் உரிமையாளர் என்ற ஆதாரம் நம்மிடம் உள்ளதா எனத் தெரியவில்லை. எதிர் தரப்பினர் அங்கு ரோடு உள்ளது என ஆதாரங்கள் காட்டியும் தீர்ப்பு நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிகிறேன். அங்கு தீர்ப்பு வேறு விதமாக வந்தால் நடிகர் சங்கம் இதுவரை செலவழித்த பணம் என்ன ஆகும்?
அதே போல் சமீபத்தில் நடந்த மலேசிய கலைவிழாவிலும் பல குளறுபடிகள்.பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன் . குறிப்பாக இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், ஆர் சுந்தர்ராஜன், பார்த்திபன், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர் தான் நிர்வாக கோளாறு. இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.?
ரஜினி கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.
மலேசியாவில் பிச்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் என்று தலைப்பிட்டு வந்த பத்திரிகையைப் பார்க்கவில்லையா?. இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம் நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா?
பணம் தேவைதான் ,அது சுய மரியாதையை விற்று சம்பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நடிகர் சங்க மூத்த நாடகக்கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி நடித்திருந்தால் (15 நிமிடம் மட்டுமே வரும் ) அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள் ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை
ஆகவே என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொறுத்தவரையில் ஓர் அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும்,மற்ற சகா கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இதுவரை என் இமெயிலில் குறிப்பிட்ட பதில் இல்லா கேள்விகளுக்காகவும்,என் ஒப்புதல் இல்லாத செயல்பாட்டுகளுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறேன்.
என் கடிதத்தின் மூலம் ரோசப்பட்டு நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்தாலும் நம் சங்க கட்டிடம் கட்டப்படும். அடுத்தமுறை வரும் தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்கவும் முடியாது எனக் கூறிக்கொள்கிறேன். இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும். பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் சிவகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago