கங்கணாவின் போராட்டம் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் யுத்தத்தைப் போன்றது: தந்தை அமர்தீப் கருத்து

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் தந்தை அமர்தீப், தனது மகளின் போராட்டங்கள் குறித்து தனக்கு இப்போது புரிவதாகவும், அவரது போராட்டம் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் போராட்டத்தைப் போல என்றும் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியலால் தான் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என கங்கணா ரணாவத் அதிரடியாகக் குற்றம்சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டார். தொடர்ந்து மும்பை காவல்துறை, மகாராஷ்டிர மாநிலம், ஆளும் சிவசேனா கட்சி என அனைத்து தரப்பையும் கங்கணா அடுத்தடுத்து எதிர்க்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு கங்கணாவின் மும்பை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி, விதிமுறை மீறி கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது.

இந்நிலையில் கங்கணா தனது குடும்பத்தினருடன் உரையாடும் காணொலி ஒன்றைச் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதில் கங்கணாவின் தந்தை அமர்தீப் தனது மகளைச் சுற்றியிருக்கும் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்தார். யாருடனும் மோத வேண்டாம் என்று அமர்தீப் கங்கணாவிடம் சொல்லும் இந்த காணொலி பலரால் பகிரப்பட்டது.

தற்போது தனது மகள் குறித்து அமர்தீப் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தொலைப்பேசியில் பேட்டி அளித்துள்ளார்.

"அவள் என்னையும் விட்டு வைத்ததில்லை. அவள் போராட்டத்தை எனக்குப் புரிய வைக்க, குடும்பத்துக்குள் நடந்த உரையாடலை பொதுவில் சமூக ஊடகத்தில் பகிர்ந்தாள். அதற்குக் கிடைத்த எதிர்வினைகளைப் பார்த்ததும் அவளது போராட்டம் என்னவென்று புரிந்தது. என் மகளின் போராட்டம் மகாபாரதத்தில் தீய சக்திகளுக்கு எதிரான கிருஷ்ண பகவானின் போராட்டத்தைப் போல.

எல்லா பெற்றோரையும் போல ஒரு தந்தையாக அவளது நலம், பாதுகாப்பு குறித்து எனக்குக் கவலை இருக்கிறது. நம் குழந்தை எவ்வளவு பெரிதானாலும், உயர்ந்தாலும் சரி, பெற்றோருக்கு எப்போதுமே அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை இருக்கும். ஆனால் இப்போது அவளது போராட்டங்கள் அவளுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

அவள் சரியானதையே செய்கிறாள். தானாக வளர்ந்த பெண்களுக்காக, பெண்களின் அதிகாரத்துக்காக அவள் போராடுகிறாள். அதனால் தான் ஒட்டுமொத்த தேசமும் அவளுக்குப் பின்னால் நிற்கிறது" என்று அமர்தீப் கூறியுள்ளார்.

முன்னதாக கங்கணாவின் தாய், தன் மகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, தான் பாஜக ஆதரவாளராக மாறிவிட்டதாகவும் கூறியிருந்தார். கங்கணாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்