பொங்கல் பானைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி: கரோனாவுக்குப் பின் ஏற்றுமதி 10 மடங்கு அதிகரிப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி 10 மடங்கு அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினைக் கலைஞர்களால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களில் பொங்கலுக்கான பானை, சட்டி, மூடி, அடுப்பு, தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்பக் கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் ஆறு, குளங்கள், நீராதாரங்களின் படுகைகளில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணுடன், பசைத் தன்மையுள்ள குறுமண்ணை கலந்து மண்பாண்டங்களை தயாரிக்கிறார்கள். இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கலுக்கான பானைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. நடப்பாண்டு பொங்கலுக்காக கடந்த 2 மாதங்களாக 2 ஆயிரம் பானைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் வண்ணம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு தற்போது சென்னைக்கு கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சரக்கு கப்பலில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கரோனாவுக்குப்பின் மொத்தமாக 2 ஆயிரம் பானைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி அருகே குறிச்சி மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.முருகன் கூறியதாவது: கரோனாவுக்கு முன் 10 ஆண்டுகளாக 4 முதல் 5 லிட்டர் கொள்ளளவுள்ள 100 முதல் 200 பானைகள் மட்டுமே மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுவந்தன. கரோனாவால் 2 ஆண்டுகளாக பானைகள் ஏற்றுமதியாகவில்லை. தற்போது 3 லிட்டர் கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும், 2.5 லிட்டர் கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மதுரையைச் சேர்ந்த கலைஞர்களை வரவழைத்து ஒவ்வொரு பானையிலும் வண்ணம் பூசி, மஞ்சள் குலை, மாவிலைத் தோரணம், தாமரை இதழ்கள் உள்ளிட்ட வண்ண ஓவியங்களையும் வரைந்து அழகுபடுத்தியிருந்தோம். கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பானைகளை கன்டெய்னரில் ஏற்றி சென்னைக்கு அனுப்பியிருக்கிறோம். ஒரு பானைக்கு ரூ.150 என்ற விலையில் இவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் பொங்கல் சந்தைகளிலும், வணிக வளாகங்களிலும் பொங்கலுக்கு 10 நாட்களுக்குமுன் இவை விற்பனைக்கு வைக்கப்படும்.

20 லட்சம் அகல் விளக்கு: இதுபோல் கடந்த ஒரு மாதத்துக்குமுன் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக இங்கிருந்து 20 லட்சம் மண் அகல் விளக்குகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. கரோனாவுக்குமுன் 60 ஆயிரம் விளக்குகளே அனுப்பப்பட்டிருந்தன. இம்முறை 4 மடங்கு அதிகமாக அகல் விளக்குகள் அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பானைகளுடன், பொங்கல் வைக்க பயன்படும் வெல்லம், ஏலக்காய் மற்றும் கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்டவையும் தனித்தனி கன்டெய்னர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்