சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகத் திகழும் சணல் பொருட்களை தயாரிக்க சிறு, குறு நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் தேசிய சணல் வாரியம் ஈடுபட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு எதிர்காலத்தில், வருங்கால தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தேசியசணல் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சணல் தயாரிப்பில் ஈடுபடும்சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதோடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் சணல் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் இவ்வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய சணல் வாரியத்தின் தென்மண்டல துணை இயக்குநர் டி.அய்யப்பன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
‘தங்க இழை’ என அழைக்கப்படும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் தன்மையுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பொருளாக உள்ளது. அத்துடன், பாதுகாப்பான பேக்கேஜிங்கிற்கும் அனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது. சணல் தொழில் மேற்கு வங்கத்தில் உள்ள முக்கியத் தொழில்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
நிறுவனங்களுக்கு தேவையான உதவி
சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபலப்படுத்தும் முக்கிய பணியை தேசிய சணல் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சணல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது. உதாரணமாக, சணல் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் வாங்க 30 சதவீதமும், மூலப் பொருட்கள் வாங்க 30 சதவீதமும், சணல் பொருட்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான கடை அமைக்க 25 சதவீதமும் மானியம் வழங்குகிறது.
கண்காட்சியில் பங்கேற்க மானியம்
இதேபோல் ஏற்றுமதியாளர்கள், வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விமானப் போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ஆகியவற்றுக்கு முதல் 3 கண்காட்சி வரை பங்கேற்க அவர்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதன்மூலம், அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்ய முடியும்.
மேலும், சணல் பொருட்களை தயாரிக்கஅரசு சாரா நிறுவனங்கள் மூலம், தொழில்முனைவோர்களுக்கு இலவச பயிற்சியையும் அளிக்கிறோம்.
அதேபோல், சணல் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக, அவர்களுக்கு இலவச சணல் பைகளை வழங்கி வருகிறோம். இதுவரை 4 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சணல் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, சென்னையில் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறோம்.
மேலும், போலியான சணல் பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், சணல் பொருட்களில் சணல் நட்சத்திரமதிப்பீடு முத்திரை அச்சிடப்படுகிறது. இது இந்திய சணல் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஓர் புதிய முயற்சி ஆகும். இவ்வாறு அய்யப்பன் கூறினார்.
விலையை ஒப்பிடக் கூடாது
கடைகளில் பொருட்களை வாங்கும்போது பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.1 முதல் 5 வரை உள்ளது. ஆனால், சணல் பையின் குறைந்தபட்ச விலையே ரூ.40 என உள்ளது. ஆனால், இவற்றின் விலையை நாம் ஒப்பிடக் கூடாது. காரணம், ரூ.40-க்கு வாங்கப்படும் சணல் பையை, குறைந்தபட்சம் 500 முறைக்கும் மேல் பயன்படுத்தலாம். ஆனால், பிளாஸ்டிக் பையை அதுபோல் பயன்படுத்த முடியாது. அத்துடன், அவை சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. சணல் பைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. எனவே, சணல் பைகளின் விலையை பார்க்காமல் அவற்றால் நமக்குக் கிடைக்கும் நன்மையைப் பார்க்க வேண்டும் என அய்யப்பன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
12 hours ago