பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்

By செய்திப்பிரிவு

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிஸோஸ் உலகின் முதல் பணக்காரராக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன் உலகின் முதல் பெரும் பணக்காரராக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் இருந்து வந்தார்.

போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட உலகின் மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர் பட்டியலில் இதுவரை இல்லாத வகையில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நபராக ஜெஃப் பிஸோஸ் இடம்பெற்றுள்ளார்.

வியாழக்கிழமை காலை நியூயார்க் பங்குச் சந்தையில் தொடக்க நேர நிலவரப்படி பிஸோஸ் சொத்து மதிப்பு 9,060 கோடி டாலராக இருந்தது. பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 9,010 கோடி டாலராக இருந்தது என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வியாழக்கிழமை மதியத்தில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன. இதனால் 1,046 டாலர் சொத்து மதிப்பு குறைந்ததால், பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். இதற்கிடையே வியாழக்கிழமை வர்த்தகத்தில் மிக அதிகபட்சமான அமேசான் பங்குகள் 1,083 டாலர் வரையில் விலை ஏற்றத்தை கண்டது. வர்த்தக நேர முடிவில் எதிர்பார்ப்புக்கு மாறாக 2 சதவீதம் வரை பங்குகள் விலை சரிந்தன.

பில்கேட்ஸ் பல நூறு கோடி டாலர்களுக்கு மேல் அறக்கட்டளை பணிகளுக்கு கொடையாக அளித்துள்ளார். இல்லையெனில், இப்போதும் ஒப்பிடமுடியாத பணக்காரராக இருப்பார் என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்துள்ள விவரங்கள்படி, பிஸோஸ் வசம் நிறுவனத்தின் 8 கோடி பங்குகள் உள்ளன. அதாவது 17 சதவீத உரிமையை வைத்துள்ளார். இதன் மதிப்பு 8,700 கோடி டாலர்களாகும். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் உரிமையாளராகவும் உள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு அறிக்கைபடி காலாண்டு லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 77 சதவீதம்வரை சரிந்துள்ளதையும் போர்ப்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செல்வந்தர்கள் வரிசை போர்பஸ் வெளியிட்ட ரியல் டைம் பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் பங்குச் சந்தையின் வர்த்தகத்தின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது. சந்தை முடிந்த நேரத்தில் மீண்டும் இரண்டாவது இடம் என்கிற நிலைக்கு வந்தார். உலகின் முதல் பணக்காரராக 2013-ம் ஆண்டு முதல் பில்கேட்ஸ் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5-வது இடத்தில் மார்க் ஸூகர்பெர்க்

இதற்கிடையே பார்ச்சூன் வெளியிட்டுள்ள அறிக்கைபடி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸூகர்பெர்க் உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரராக உருவாகியுள்ளார். நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு அறிக்கைபடி, இதன் பங்கு விலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரராக உருவாகியுள்ளார்.

பார்ச்சூன் அறிக்கைபடி, ஸூகர்பெர்க்கின் மொத்த சொத்து மதிப்பு 7270 கோடி டாலராக உள்ளது. (இந்திய மதிப்பில், ரூ.4,66,466 கோடி) மேலும் 300 கோடி டாலர் சொத்து உயர உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிக அதிக பங்குகளை ஸூகர்பெர்க் வைத்துள்ளார். 2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. உலக அளவில் 200 கோடி மாதாந்திர பயனாளிகளை நிறுவனம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

ஜோதிடம்

10 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

27 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்