நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவிகிதத்துக்கு கீழே குறையும்:ரங்கராஜன்

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) 3 சதவீதத்துக்குக் குறைவாக இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், நடப்பு நிதி ஆண்டில் (2013-14) பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறியது:

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்கும் கீழாகக் குறையும். இந்த அளவுக்குக் குறைப்பது ஒன்றும் சிரமமான விஷயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது இந்தியாவிலிருந்து வெளியேறும் அன்னியச் செலாவணியால் ஏற்படுவது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும்போது பற்றாக்குறை அதிகரிக்கும். கடந்த நிதி ஆண்டில் (2012-13) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகபட்சமாக 8,820 கோடி டாலராக இருந்தது. இது நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 4.8 சதவீதமாகும். இது அதிகரித்ததற்கு முக்கியக் காரணமே தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கான சுங்க வரியை அதிகரித்தது. அத்துடன் ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பை உயர்த்தும் நடவடிக்கையிலும் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 5,600 கோடி டாலர் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இடைக்காலத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீத அளவில் கட்டுப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு அதிக அளவு வீழ்ச்சியடையாமல் இருந்தது என்றும் ரங்கராஜன் கூறினார்.

ஆகஸ்ட் மாதத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஒரு டாலருக்கு ரூ. 68.85 என்ற அளவுக்குச் சரிந்தது. இந்தியப் பொருளாதாரம் மிக இக்கட்டான தருணத்தில் உள்ளது. இதனால் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் இது ஓரளவு மேம்பட்டு 5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றார்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும். இதனால் வளர்ச்சி 5.3 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது உள்ள நிலையில் முதலீடுகள் தொடரும்பட்சத்தில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை உயரும். முதலீட்டில் 30 சதவீதம் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீத அளவுக்கு உயர வேண்டுமானால் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டியது கட்டாயமாகும். அதேபோல நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பற்றாக்குறை 2012-13-ம் நிதி ஆண்டில் 4.9 சதவீதமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 4.8 சதவீதமாகக் குறையும் என்று அவர் மேலும் தெரிவித்தார். முதலீட்டு செலவுகள் அதிகரிக்கப்பட்டு அரசின் நுகர்வுக்கான செலவினங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. திட்டப் பணிகளை துரிதமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளாக அவர் பட்டியலிட்டார்.

முதலீட்டுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ள முதலீட்டுத் திட்டப் பணிகளின் பலன் அடுத்த நிதி ஆண்டில் பிரதிபலிக்கும் என்று அவர் கூறினார். ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மத்திய அமைச்சரவைக் குழு ரூ. 3.84 லட்சம் கோடிக்கான முதலீட்டுத் திட்டங்களை அனுமதித்துள்ளது என்றார்.

நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே நேரம் சுற்றுச் சூழலிலும் கவனமாக இருத்தல் வேண்டும். அதற்குரிய சம நிலையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் சட்ட ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயத்தைப் பொருத்த மட்டில் நாடு முழுவதும் சமச்சீரான விநியோக நிலை அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளின் ஒத்துழைப்பை நாடலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அரசுத் துறை மற்றும் தனியார் துறை நிர்வாகத்தில் திறமை மற்றும் சேவை அதிகரிக்க வேண்டும். இதற்கு வெளிப்படைத் தன்மை அவசியம் என்றும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்