ரட்யார்டு கிப்ளிங் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற ஆங்கிலக் கவிஞர்

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளரும், கவிஞருமான ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் (Joseph Rudyard Kipling) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாயில் (1865) பிறந்தார். தந்தை சிற்பி மற்றும் மண்பாண்ட வடிவமைப்பாளர். பம்பாயில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் கலைக் கல்லூரி பள்ளி முதல்வராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

* சிறுவயதில் கிப்ளிங்கை வளர்த்த இந்தியப் பெண்மணி பல இந்தியக் கதைகள், பாடல்களை இவருக்குக் கூறுவார். அவை தன் நினைவை விட்டு அகலவே இல்லை என்று இவர் குறிப்பிட்டுள்ளார். 5 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் தம்பதியிடம் 6 ஆண்டுகள் வளர்ந்தார்.

* அந்த காலக்கட்டம் பயமும் பீதியும் கலந்திருந்ததாகவும், அவர்களிடம் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும் 65 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து பெற்றோர் 1877-ல் இங்கிலாந்து திரும்பிய பிறகு, அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார்.

* ‘தி யுனைடட் சர்வீஸஸ்’ கல்லூரியில் பயின்றார். லாகூரில் வேலை கிடைத்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சிவில் அண்ட் மிலிட்டரி கெஸட் என்ற உள்ளூர் நாளிதழில் காப்பி எடிட்டிராகப் பணியாற்றினார். 1882-ல் பம்பாய் வந்தார். பல கவிதைகள் எழுதினார். 1886-ல் முதல் கவிதைத் தொகுப்பு ‘டிபார்ட்மென்டல் டிட்டீஸ்’ வெளிவந்தது.

* தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் கதைகள், கவிதைகள் எழுதினார். ஓராண்டுக்குள் இவரது 39 கவிதைகள், உரைநடைத் தொகுப்பு, 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்தன. அலாகாபாத்தில் உள்ள ‘தி பயனீர்’ இதழில் பணியில் அமர்ந்தார். அங்கும் எழுத்துப் பணி தொடர்ந்தது. பின்னர், 6 குறுங்கதைத் தொகுப்புகள் வெளிவந்தன.

* இந்தியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றார். அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டவர், ஏராளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருந்தார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2 நூல்களாக வெளிவந்தன.

* லண்டன் திரும்பிய பிறகு, கதைகள் எழுத ஆரம்பித்தார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயரின் வாழ்க்கை பற்றிய ‘லைஃப்ஸ் ஹேண்டிகேப்’ என்ற குறுங்கதைத் தொகுப்பு லண்டனில் வெளியிடப்பட்டது. 1892-ல் இவர் எழுத ஆரம்பித்த ‘தி ஜங்கிள் புக்’, பல கதைகள் கொண்ட நூலாக உருவானது. உலகம் முழுவதும் சிறுவர்கள் விரும்பும் கதைகளில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

* தொடர்ந்து பல கவிதை, சிறுகதை தொகுப்புகள், நாவல்களைப் படைத்தார். இவரது ‘கிம்’ நாவல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார். குழந்தை இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியாகவும், குறுங்கதைக் களத்தின் முன்னோடியாகவும் இவர் போற்றப்படுகிறார்.

* இவரது பல படைப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசை 42-வது வயதில் பெற்றார். இதன்மூலம், மிகக் குறைந்த வயதில் நோபல் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் 71-வது வயதில் (1936) மறைந்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்