பி.தியாகராயர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் (P.Thyagarayar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை கொருக்குப்பேட்டையில் வசதியான குடும்பத்தில் (1852) பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தந்தை நடத்திய நெசவு, தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாய் ஆகிய தொழில்களை கவனித்து வந்தார்.

* தொழில்களுக்கு உதவியாக 100 படகுகளுடன் சொந்தமாக போக்குவரத்து கம்பெனி நடத்திவந்தார். தன் வீட்டருகில் ‘பிட்டி’ நெசவாலை என்ற நெசவாலையை ஏற்படுத்தினார். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப்புகழ் பெற்றவை.

* ‘சென்னை உள்நாட்டினர் சங்கம்’ என்ற அமைப்பை 1882-ல் தொடங்கினார். இது பிற்காலத்தில் ‘சென்னை மகாஜன சபை’ என்று மாற்றப்பட்டது. இச்சபை அவ்வப்போது கூடி விவாதித்து தங்கள் கோரிக்கையை ஆங்கிலேய அரசுக்கு தெரிவித்தது.

* சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸின் 2-வது மாநாட்டை முன்னின்று நடத்தினார். சென்னை வந்த காந்தியடிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். 1916 வரை காங்கிரஸில் இருந்தவர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகினார். அதே ஆண்டு வேப்பேரியில் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டி ‘தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

* இந்த அமைப்பு சார்பில் ‘நீதி’ என்ற இதழை நடத்தினார். இதன் பெயரைக் கொண்டே இந்த அமைப்பு நீதிக்கட்சி (Justice Party) எனக் குறிப்பிடப்பட்டது. இதன் தலைவராகப் பொறுப்பேற்று, கட்சியை சிறப்பாக நிர்வகித்தார்.

* இவரது தன்னலமற்ற முயற்சியால், 1921-ல் சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார்.

* கட்சிப் பணியை தொடர்ந்து செய்தார். கோயில் திருப்பணிகளையும் மேற்கொண்டார். சென்னை நகராட்சி உறுப்பினராகத் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார். சென்னை நகரமன்றத் தலைவராக (மேயர்) இருந்து மகத்தான பணிகளைச் செய்தார். அரசுப் பள்ளியில் இலவச மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் தன் சொந்த செலவில் தொடங்கிவைத்தார்.

* இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியை 1892-ல் தொடங்கினார். ‘திராவிடன்’ என்ற தமிழ் நாளேடு, ‘ஆந்திர பிரகாசிக ஜஸ்டிஸ்’ என்ற தெலுங்கு நாளேட்டை நடத்தினார். பார்வையற்றோருக்கான பள்ளி, பிச்சைக்காரர் இல்லம், இலவச மருத்துவமனைகள் தொடங்கினார். மது ஒழிப்புக்காகப் பாடுபட்டார். சாதி ஆதிக்கத்தை எதிர்த்தார்.

* சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது. சென்னை, ஆந்திரா பல்கலைக்கழகங்களை நிறுவ அரும்பாடுபட்டார். அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தொழில்நுட்ப பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினார்.

* சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு இவரது நினை வாக தியாகராய நகர் (தி.நகர்) என்று பெயர் சூட்டப்பட்டது. இவரைப் பற்றி பல நூல்கள் வெளிவந்தன. ‘வெள்ளுடை வேந்தர்’ எனப் போற்றப்பட்ட சர் பிட்டி தியாகராய செட்டியார் 73-வது வயதில் (1925) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்