முத்துக் குளிக்க வாரீகளா 8: ஐந்திணையின் அம்சங்கள்!

By கவிக்கோ அப்துல் ரகுமான்

பைபிளும் குர்ஆனும் கூறும் ஹாபீல், காபீல் இரண்டும் தொன்மத்தில் கவனிக்கப்பட வேண்டிய பெயர்கள்.

பைபிள் ஹாபீலை ‘ஆபேல்’ (Abel) என்றும் காபீலை ‘கெய்ன்’ (cain) என்றும் குறிப்பிடுகிறது.

மனித இன வரலாற்றுத் தொடக்கத்தில் மனிதன் முதலில் வேட்டையாடி வாழ்ந்தான். பிறகு ஆடு, மாடுகளை வளர்த்து வாழ்ந்தான். அதன் பின்பு விவசாயத்தை அறிந்துகொண்டு, ஆற்றங்கரைச் சமதளங்களில் விவசாயம் செய்தான். அப்போதுதான் ஊரும், நகரும், நாடும் உண்டாயின. அரசும் உண்டாயிற்று.

ஆ, கோ என்பவை தமிழில் மாட்டைக் குறிக்கும்.

ஆடு, மாடு வளர்த்து வாழ்ந்த காலத்தில் தலைவர்கள் ‘கோ’ என்றும் ‘கோன்’ என்றும் அழைக்கப்பட்டார்கள்.

நாடும் நகரமும் உண்டாகி அரசும் ஏற்பட்ட போது அரசனும் ‘கோ’என்றும் ‘கோன்’என்றும் அழைக்கப்பட்டான்.

‘ஆபேல் (ஹாபீல்) ‘ஆவலன்’ (கோவலன் என்பது போல) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான். தமிழில் ‘வ’ என்ற ஒலி பிற மொழி களில் ‘ப’ வாகும். எடுத்துக்காட்டு: வங்காளம் - பங்காள்; ரவீந்திரநாத் – ரபீந்திரநாத். ‘வலன்’ என்றால் வளர்ப்பதில், பராமரிப்பதில் வல்லவன் என்று பொருள்.

‘ஆபேல்’ஆடு, மாடு மேய்க்கும் இடையராக இருந்தார் என்று பைபிள் கூறுகிறது.

காபீல் என்பது காவலன் என்ற சொல்லின் திரிபே. பைபிள் காபீலைக் ‘கெய்ன்’ என்று அழைக்கிறது. இது ‘கோன்’ என்பதன் திரிபே.

பழங்காலத்தில் அரசர்கள் ‘காவலன்’ என்றும் ‘கோன்’என்றும் அழைக்கப்பட்டனர்.

ஹாபீலைப் புதைத்துவிட்டு ஓடிய ‘கெய்ன்’ ஒரு நகரை உண்டாக்கினான் என்று பைபிள் கூறுகிறது. அங்கே அரசை உண்டாக்கி அதை அவன் ஆண்டான். அவன்தான் மனித இனத்தில் முதல் ‘கோன்’(கெய்ன்).

‘கெய்ன்’ விவசாயி என்று பைபிள் கூறுகிறது. மனிதன் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்த காலத்தில் அரசோ, அரசனோ இல்லை. அவன் விவசாயம் செய்து குடியானவனாக மாறிய பிறகுதான் அரசும், அரசன் என்ற பதவியும் உண்டாயின.

தமிழ் இலக்கண நூலார் மனித வாழ்க்கையை அகம் என்றும், புறம் என்றும் இரு பகுதிகளாகப் பாகுபடுத்துகின்றனர். பொதுவாக அகம் என்பது காதலையும், புறம் என்பது வீரத்தையும் குறிக்கும்.

அகப்பொருள் இலக்கணம் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரிக்கிறது. மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை; வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம்; கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல்.

தமிழ் அகப்பொருள் கூறும் பாலை சஹாரா பாலைவனம் போன்றதல்ல. குறிஞ்சி, முல்லை நிலங்கள் கடுங்கோடையில் வளம் இழந்து வறண்டு போகும்போது அவை பாலை எனப்படும்.

தொல்காப்பியர் முல்லையை முதலாவதாகக் கூறினாலும், நம்பியகப் பொருள் போன்ற நூற்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றே நிலங்களை வரிசைப்படுத்துகின்றன.

இவ்வரிசை மனித இன வரலாற்றின்படி மனிதன் தோன்றி வாழ்ந்த இடங்களைச் சுட்டுவதாக அமைந்திருக்கிறது.

மனிதன் முதலில் மலையில் தோன்றி வாழ்ந்தான். அந்த வாழ்க்கை கடினமாக இருக்கவே காட்டுக்கு வந்து ஆடு, மாடு வளர்த்து வாழ்ந்தான். அந்த வாழ்க்கையும் கடினமாக இருக்கவே அவன் சமதளத்துக்கு வந்தான். அங்கே விவசாயத்தைக் கண்டுபிடித்து அதைச் செய்து வாழ்ந்தான் என்று மனித இன வரலாறு கூறுகிறது.

மனிதன் கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்பு மலையில் வேட்டையாடி வாழ்ந்தான் என்றும் கி.மு.7000 ஆண்டு அளவில் கால்நடை மேய்த்து வாழ்ந்தான் என்றும் அதன் பின்பு கி.மு.3000 ஆண்டு அளவில் அவன் வேளாண்மை செய்து வாழ்ந்தான் என்றும் மனித இன நூலார் கூறுகின்றனர்.

ஆதாம், ஹாபீல், காபீல் பற்றிய தொன்மங்கள் மனித இன வரலாற்றின் தொடக்க காலத்தைத் தொகுத்துக் கூறுகின்றன.

ஆதாம் ‘ஆதத்தின் சிகரம்’என்ற மலையின் மீதே குடியேறி வாழ்ந்தார் என்பதை முன்னர்க் கண்டோம்.

பைபிள் ஆதாம், ஏவாளின் மூத்த மகனாக காயீனையும், இளைய மகனாக ஆபேலையும் கூறினாலும், அவர்கள் தொழில்களைக் கூறும் போது முதலில், ஆபேலைக் கூறி அவன் ஆடுகளை மேய்க்கிறவன் ஆனான் என்றும் பின்பு காயீனைக் கூறி அவன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆனான் என்றும் கூறுகிறது. (ஆதி யாகமம், 4.1 - 2). இது மனித இன வரலாற்றின்படி அமைந்திருப்பதைக் கவனிக் கலாம்.

தொன்மைக் கால மனித இன வரலாற்றுப்படியே மனிதன் தொடக்கத்தில் மலையில் வேட்டையாடி வாழ்ந்தான் என்றும், பின்பு காட்டில் கால்நடை வளர்த்து வாழ்ந்தான் என்றும், பின்பு வயலில் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்றும் தமிழ் அகப்பொருள் வரிசைப்படுத்திக் கூறுவது வியக்க வைக்கிறது. இதுவும் தமிழினத்தின் தொன்மையை உணர்த்துகிறது.

ஆதன், அவ்வை என்ற பெயர்கள் மட்டுமின்றி ஆவலன், காவலன், கோன் என்ற தமிழ் பெயர்களே ஆதம், ஈவ், ஆபேல், காபீல், கெய்ன் என்று திரிந்து வழங்குவதும் தொடக்க கால மனித இனம் தமிழினமே என்பதற்கான அரிய சான்றுகளாகும்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

41 mins ago

கல்வி

34 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

37 mins ago

ஓடிடி களம்

44 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்