இந்துஸ்தானி இசை இலக்கணத்தை எளிமைப்படுத்திய இசை மேதை பண்டிட் விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkande) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மும்பை அருகே பாலகேஷ்வர் கிராமத்தில் (1860) பிறந்தார். இசை ஆர்வம் மிக்க தந்தை, இவரையும் இசை கற்க ஊக்கப்படுத்தினார். அதனால் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார்.
l வல்லப்தாஸிடம் சிதாரும், ராவ்ஜிபாவிடம் வாய்ப்பாட்டும் கற்றார். பட்டப் படிப்புடன் சட்டமும் பயின்றார். பின்னர், வழக்கறிஞர் பணி மேற்கொண்டார். கராச்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
l பெல்பக்கர், அலி உசேன்கான், விலாயத் உசேன்கானிடமும் இசை பயின்றார். மும்பையில் ‘காயக் உத்தேஜன் மண்டல்’ என்ற சங்கீத அமைப்பின் உறுப்பினரானார். இசையை ஆழமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.
l இவரது சங்கீத தேடல் பயணம் 1907-ல் தொடங்கியது. தென்னிந்திய நூலகங்களுக்கு சென்று இசை பற்றிய பழமையான நூல்களைப் படித்தார். வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு யாத்திரை சென்று பல இசை நிபுணர்களை சந்தித்தார்.
l மனைவியும் மகளும் நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்த பிறகு வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, முழுமூச்சாக இசைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ராகங்கள் பற்றிய விளக்கங்கள் அடங்கிய ‘ஸ்வர் மாலிகா’ இவரது முதல் நூல். ‘மல்லாட்சய சங்கீதம்’ என்ற சமஸ்கிருத நூலை 1909-ல் வெளியிட்டார். அதன் விளக்க உரையை மராத்தியில் எழுதினார். இந்துஸ்தானி இசை கற்பவர்களுக்கு இன்றளவும் இந்நூல் முக்கியமானதாக விளங்குகிறது.
l இந்துஸ்தானி இசை குறித்து ஆராய்ச்சி செய்து, நவீன ஆய்வுக் கட்டுரையை எழுதினார். ராகா (ஆண்), ராகினி (பெண்), புத்ரா (குழந்தை) என்ற அடிப்படையில் ராகங்கள் வகைப்படுத்தப்பட்டதை மாற்றி, ஸ்வரங்கள் அடிப்படையிலான ‘தாட்’ முறையை அறிமுகம் செய்தார்.
l ராகங்களை எளிதில் புரியவைக்க ‘பந்திஷ்’ எனப்படும் இசைக் கோர்வைகளை உருவாக்கினார். இவை ராகங்களின் இலக்கணத்தை விளக்கின.
l பல இசைப் பள்ளிகள், இசைக் கல்லூரிகளைத் தொடங்கினார். பரோடா ஸ்டேட் இசைப் பள்ளியை 1916-ல் மறுசீரமைத்தார். குவாலியர் மஹாராஜாவின் உதவியுடன் குவாலியரில் மாதவ் இசைக் கல்லூரியைத் தொடங்கினார். லக்னோவில் தொடங்கப்பட்ட மேரீஸ் இசைக் கல்லூரிக்காக பிரத்யேக பாடத் திட்டம் தயாரித்தார். இக்கல்லூரி ‘பாத்கண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விளங்குகிறது
l வாய்மொழியாக இருந்த இசைக்கு நூல் வடிவம் தந்தார். ‘சங்கீத் க்ராமிக் புஸ்தக் மாலிகா’ என்ற பாட நூலை 6 தொகுதிகளாகத் தயாரித்தார். சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, ஆங்கிலத்தில் ஏராளமான இசை நூல்களைப் படைத்துள்ளார்.
l இந்திய சாஸ்திரிய இசை குறித்து இந்துஸ்தானி, கர்னாடக இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி விவாதிக்கும் வகையில் தேசிய இசை மாநாடுகள் நடத்தும் முறையை தொடங்கிவைத்தார். ‘இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை’ என்று போற்றப்படும் பாத்கண்டே 76 வயதில் (1936) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago