‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழியில் வல்லவர்.
சென்னை பல் கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. இவர் கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார்.
கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. ‘தி கோல்டன் த்ரஷோல்ட்’ (The Golden Threshold), ‘தி பேர்ட் ஆஃப் டைம்’ (The Bird of Time), ‘தி ப்ரோக்கன் விங்’ (The Broken Wing) குறிப்பிடத்தக்கவை.
‘இந்தியாவின் கவிக்குயில்’ என்று வர்ணிக்கப்பட்டார். இவரது கவிதைகளுக்கு தாகூர், நேரு உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். 1905-ல் வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.
காந்தி, நேரு, கோகலே, தாகூர், ஜின்னா, அன்னி பெசன்ட் ஆகிய முக்கியத் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றினார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார்.
1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார். 1925-ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர். காந்திஜி இவரை செல்லமாக ‘மிக்கி மவுஸ்’ என்பார்.
சட்ட மறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டு பல மாத சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.
‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடு 70 வயதில் மறைந்தார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
29 mins ago
ஜோதிடம்
34 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago