லாலா லஜ்பத் ராய் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தியாவின் விடுதலைக்காகவும் சமூக, சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜ்பத் ராய் (Lala Lajpat Rai) பிறந்த தினம் இன்று (ஜனவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 பஞ்சாபில் பிறந்தவர். லாகூர் அரசுக் கல்லூரியில் சட்டம் பயின்ற பிறகு, வழக்கறிஞராகப் பணி யாற்றினார். அலகாபாத் தில் 1888-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். வங்கப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியது.

 சுரேந்திரநாத் பானர்ஜி, அரவிந்தகோஷ் ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கத்துக்காக தீவிரமாகப் போராடினார். சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய 3 தலைவர்களை ‘லால்-பால்-பால்’ என்பார்கள். அவை முறையே லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திரபாலைக் குறிக்கும்.

 பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார். பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார்.

 அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட குழுவில் அங்கம் வகித்தார். ‘இந்திய ஹோம் லீக் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

 ‘யங் இந்தியா’ என்ற நூலை எழுதினார். வெளியிடப்படும் முன்பே இந்தியா, பிரிட்டனில் இந்த நூலை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது. இவர் எழுதிய ‘அன்ஹேப்பி இந்தியா’ என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியால் துன்புறும் இந்தியர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.

 காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பஞ்சாபில் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார். இதற்காக 18 மாத சிறைத் தண்டனை பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார்.

 முதலில் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். பிறகு ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் கிருஷ்ணரின் கதையை எழுதியுள்ளார்.

 ஒரே மொழிதான் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் என்று கூறிய அவர், இந்தியை தேசிய மொழியாக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்துக்கான சைமன் குழுவில் ஒரு இந்தியர்கூட இடம்பெறாதது நாடு முழுவதும் ஆவேச அலையை எழுப்பியது. 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

 ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜ்பத் ராய், ‘‘என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்’’ என்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்களிலேயே காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

11 mins ago

ஆன்மிகம்

21 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்