நெல்லி சாஸ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜெர்மானியப் பெண் கவிஞர் நெல்லி சாஸ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை செல்வந்தர். உடல் பலவீனம் காரணமாக, வீட்டிலேயே கல்வி பயின்றார். நாட்டியத்தில் ஆர்வம் இருந்தாலும், உடல்நல பாதிப்பு காரணமாக ஈடுபட முடியவில்லை.

 கலகலப்பாக பேசக்கூடியவர் அல்ல. ஆனாலும், கடிதங்கள் மூலம் அதிக நட்பு வட்டாரம் கொண்டவர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் எழுத்தாளர் செல்மா லேகர்லாவ், ஜெர்மனியின் புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ஹில்டி டாமின் உட்பட பலரது நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்.

 17 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். 1920-களில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ஜெர்மனி அதிகாரத்தை நாஜிக்கள் கைப்பற்றியதும், வயதான தாயை அழைத்துக்கொண்டு 1940-ல் ஸ்வீடனுக்குத் தப்பினார்.

 ஒரே வாரத்தில் அந்த பகுதியில் இருந்த யூதர்கள் அனைவரும் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பில் (சித்ரவதை முகாம்) ஆஜராக உத்தரவிடப்பட்டது. நூலிழையில் அவர் தப்பியபோதிலும், ஜெர்மனியில் யூதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அறிந்து ரத்தக்கண்ணீர் வடித்தார்.

 ஸ்வீடன் மொழியைக் கற்றார். ஜெர்மன், ஸ்வீடன் கவிதைகளை பரஸ்பரம் மொழிபெயர்த்தார். அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தினார். ஆதரவாக இருந்த தாய் மறைந்த பிறகு, தனிமை வாட்டியது. ஜெர்மனி கொடுமைகளால் அவரது மனநலம் பாதிக்கப்பட்டது. நரம்புத் தளர்ச்சி, பிரமை, பீதி, உருவெளித் தோற்றங்கள் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்.

 மனநலக் காப்பகத்தில் பல ஆண்டுகள் கழித்தார். அங்கும் எழுதுவதை நிறுத்தவில்லை. உடல்நலமும் மனநலமும் படிப்படியாக சீராகின. ஒரு கவிஞராக மறுவாழ்வை 50-வது வயதில் தொடங்கினார்.

 புகழ்பெற்ற பல ஜெர்மன் எழுத்தாளர்களுடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். யூதர்களின் துயரங்களைப் பற்றிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. நண்பர் பால் செலனுடனான இவரது நட்பு இன்றும் பேசப்படுகிறது. காலம் காலமாக யூதர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றிய வேதனையை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

 இவரது கவிதை வரிகள் மிக தீர்க்கமானவை. நாஜிக்களின் மரண முகாம்களில் இருந்து யூதர்களின் உடல்கள் ஆவியாகி புகையாக வெளியேறுவதாக ‘ஓ தி சிம்னிஸ்’ என்ற கவிதையில் சித்தரித்திருப்பார்.

 இவரது கவிதை நடை தனித்துவமானது. இவரது கவிதைத் தொகுப்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. நாடகங்கள், சுயசரிதையும் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து எங்கிருந்து தப்பி வந்தாரோ, அதே ஜெர்மனியில் இவருக்கு அமைதிக்கான ஜெர்மன் வெளியீட்டாளர்கள் பரிசு 1965-ல் கிடைத்தது.

 இஸ்ரேலியர்களின் தலைவிதி பற்றி வலுவான, நேர்மையான முறையில் விவரித்து எழுதிய இவரது அசாதாரண இலக்கியப் பங்களிப்புக்காக, உக்ரைன் நாட்டின் எஸ்.ஒய்.அக்னானுடன் சேர்த்து இவருக்கு 1966-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கவிஞர் நெல்லி சாஸ் 79 வயதில் காலமானார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்