தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய காந்தியவாதி ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
ராஜஸ்தானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உறவுக்கார பணக்கார தம்பதியின் பேரனாகத் தத்தெடுக்கப்பட்டார். தொழில் நுணுக்கங்களை கற்று, தாத்தா இறப்பதற்கு முன்பு குடும்பத் தொழிலை எடுத்து நடத்தும் அளவுக்கு முன்னேறினார். பின்னாளில் பஜாஜ் குழுமமாக புகழ்பெறவிருந்த தொழில் நிறுவனத்தை1926-ல் தொடங்கினார்.
முதல் உலகப் போரின்போது நிதி வழங்கிய இவருக்கு பிரிட்டிஷ் அரசு ராய் பகதூர் விருது வழங்கியது. 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டபோது அதை திருப்பிக்கொடுத்துவிட்டார்.
மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவுடன், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். அனைவரும் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதே நாட்டின் வறுமையைப் போக்கும் என்ற காந்தியின் தொலைநோக்கு இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்கள் இங்கிருந்து மலிவு விலையில் பருத்தியை வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கிருந்து விலை அதிகமான துணிகளாக இறக்குமதி செய்வதையும் கண்டார். சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காந்தியின் எளிய வாழ்க்கை பிடித்ததால், மனைவி, மக்களோடு சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார். 1923-ல் கொடி சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காந்திக்கு மிகவும் நெருக்கமான சகாவாக, அவரைப் பின்பற்றினார். காந்தி இவரை தன் மகன்போலக் கருதினார்.
காந்தி வார்தாவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பம். 1930-ல் வார்தா அருகே உள்ள சேவாகிராம் என்ற கிராமத்தில் காந்தி வசிக்கத் தொடங்கினார். காந்தி சேவா சங்கத்தின் தலைவராக ஜம்னாலால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், 1933-ல் காங்கிரஸ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீண்டாமை ஒழிப்பு, இந்தி பிரச்சாரம், கதர் ஆடை மற்றும் கிராமத் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முழு மூச்சுடன் பங்கேற்றார். கதர் அணிவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
தேசப் பொது மொழி அவசியம் என்று காந்திபோலவே இவரும் கருதினார். இந்தியைப் பரப்ப, ராஜாஜியுடன் சேர்ந்து தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா தொடங்கினார்.
ஹரிஜன மக்களுக்காக வார்தாவில் 1928-ல் லட்சுமி நாராயண் மந்திர் என்ற கோயிலை சொந்த செலவில் கட்டினார். சமபந்தி போஜனங்களில் கலந்துகொண்டார். தனது வயல்கள், தோட்டங்களில் பொதுக் கிணறுகளை வெட்டினார்.
தனது செல்வத்தில் பெரும் பங்கையும் தொழில் லாபத்தையும் சமுதாய நலன்களுக்காகவே செலவிட்டார். ‘தனிநபர் ஆதாயத்தைவிட சமுதாய நலன்தான் முக்கியம்’ என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். 53-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago