உலக புகழ்பெற்ற இந்திய ஓவியர்
‘இந்தியாவின் பிகாஸோ’ என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் எம்.எஃப்.ஹுசைன் (M.F.Husain) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் (1915) பிறந்தவர். மக்புல் ஃபிதா ஹுசைன் என்பது இவரது முழுப் பெயர். சிறு வயதிலேயே தாயை இழந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு, குடும்பம் இந்தூரில் குடியேறியது. அங்கு ஆரம்பக் கல்வி பயின்றார்.
*இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நன்கு கவிதையும் எழுதுவார். சிறு வயதுத் தோழருடன் சேர்ந்து புராணங்கள், கீதை, உபநிடதங்கள் கற்றார். ராம் லீலா கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். முதலில் காலிகிராஃபி ஓவியம் பயின்றார். 20-வது வயதில் பம்பாய் சென்று, ஜே.ஜே. கலைப்பள்ளியில் சேர்ந்தார்.
*ஆரம்பத்தில் திரைப்பட விளம்பரத் தட்டிகள் வரைந்தார். பொம்மை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டார். சூரத், பரோடா, அஹமதாபாத் சென்று அங்குள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை ஓவியமாகத் தீட்டினார். 1940-களில் இவரது படைப்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1947-ல் பம்பாய் ஆர்ட் சொசைட்டி கண்காட்சியில் வைக்கப்பட்ட ‘சுன்ஹேரா சன்சார்’ ஓவியம் விருது பெற்றது.
*டெல்லி சென்றவர், மதுரா சிற்பங்கள், ஓவியங்களால் வசீகரிக்கப்பட்டார். இது அவரது ஓவிய வளர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்திய, மேற்கத்திய பாணியை ஒன்றிணைத்து புதிய பாணியை உருவாக்கினார். நாட்டின் பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தினார்.
*ராமாயணத்தை ஆழ்ந்து படித்து, 8 ஆண்டுகளாக உழைத்து, 150 ராமாயண ஓவியங்கள் தீட்டினார். 1952-ல் முதன்முதலாக ஜூரிச்சில் ஓவியக் கண்காட்சி நடத்தினார். இதைத் தொடர்ந்து இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.
*நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் ஓவியங்களை வரைந்துள்ளார். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, ராமாயணம், மகாபாரதம், சிவன், விஸ்வாமித்திரர், 45 நீர்வண்ண ஓவியங்கள் அடங்கிய தொடர் ஓவியம், ‘பாசேஜ் த்ரூ ஹ்யூமன் ஸ்பேஸ்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
*‘எனது ஓவியங்கள் கதை சொல்ல வேண்டும். மக்களுடன் பேச வேண்டும். பாரம்பரியத்தோடு கிராமியத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்பார். மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர், கீட்ஸ் போல காளிதாசன் பற்றியும் கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
*திரைப்படம், புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மாதுரி தீட்சித், தபு ஆகியோரது தீவிர ரசிகர். அவர்களை வைத்து திரைப்படங்களும் இயக்கியுள்ளார். 1987-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*படைப்பாற்றலுக்காக மட்டுமல்லாது, சர்ச்சைகளாலும் அதிகம் பேசப்பட்டவர். சில ஓவியங்களுக்காக பொதுநல வழக்குகளை சந்திக்க நேர்ந்ததால், 2006-ல் துபாயில் குடியேறினார். பின்னர், லண்டன் சென்றவர் இறுதிவரை அங்கேயே வசித்தார். பிரபல போர்ப்ஸ் இதழ் இவருக்கு ‘இந்தியாவின் பிகாஸோ’ என புகழாரம் சூட்டியது.
*பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2 மில்லியன் டாலருக்கு இவரது ஓவியம் ஒன்று விலைபோனது. ஓவிய உலகில் தனித்துவம் வாய்ந்தவராகப் போற்றப்பட்ட எம்.எஃப்.ஹுசைன் 96-வது வயதில் (2011) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 secs ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago