கடந்த ஆண்டு, தமிழகம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வரலாறு காணாத இளைஞர் எழுச்சியுடன் புலர்ந்தது. விவசாயிகளின் தணியாத தாகத்துடன் அந்தி மயங்கி அமைதி கண்டது.
இவ்வருடம், மீண்டும் காவிரி உரிமை மீட்பு போராட்டமாகப் புலர்ந்து உச்சி வெய்யிலில் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் கரம் கோர்த்திருக்கின்றன.
தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும், திரைத் துறையினரும், ஊடகத் துறையினரும், மருந்து விற்பனையாளர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைப் பிரிவினரும், இன்னும் பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துள்ளனர்.
ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் தேங்கியிருந்த தமிழக அரசியல் களம் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்களால் புது ஆற்றலைப் பெற்று பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த ஆற்றல்கள், அரசியல் களத்தில் புதியன (Inventions/Innovations) பல புனைந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், கடந்த 30 ஆண்டுகால அரசியல் தேக்கத்திற்கு காரணமாக இருந்த ஆற்றல்கள், இப்புதுமைகளை போலச் செய்து (Imitation) கொண்டிருக்கின்றன.
இவ்விரு போக்குகளையும் அடையாளம் கண்டுகொள்வது, தமிழக உரிமை மீட்பிற்கு மிகுந்த அவசியமாகும்.
புது ஆற்றல்கள் – புதுப் பாய்ச்சல்கள் – புதியன புனைதல்
கடந்த ஆண்டின் ஜல்லிக்கட்டு ஆதரவு இளைஞர் எழுச்சி தமிழகத்தின் புதிய ஆற்றல்கள் அனைத்திற்கும் புது வெளிகளை மடை திறந்துவிட்ட ஒன்று எனச் சொல்வது சாலப் பொருந்தும்.
கடலில் கால் நனைக்கச் செல்லும் உல்லாச வெளியாகத் திகழ்ந்த கடற்கரையையும், காற்று வாங்க காலாற நடக்கச் செல்லும் பூங்காக்களையும்
அரசியல் போராட்ட வெளியாக மாற்றிக் காட்டியது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர் எழுச்சி. அடையாளச் சடங்காக இருந்த இரயில் மறியல்
போராட்டங்களை உயிரைத் துச்சமென மதித்து எதிர்கொண்டு மறிக்கும் வீர விளையாட்டாக மாற்றிக் காட்டியது.
இதன் தொடர்ச்சியாக, உரிமைக் கோரிக்கைகளை அடையாளக் கோரிக்கைகளாக வைக்க “அகலத் திறந்து” வைக்கப்பட்டிருக்கும் “ஜந்தர் மந்தர்” மைதானத்தை, அரசை அதிரவைக்கும் அரங்காக மாற்றிக் காட்டினர் தமிழக விவசாயிகள்.
சிறு நீரைக் குடித்தும், செத்த எலிகளைக் கடித்தும், நிர்வாணக் கோலத்தைத் தரித்தும் விவசாயிகளின் துயரத்தை உலகம் உற்று நோக்க வைத்தனர். இந்தியத் துணைக்கண்டமெங்கும் தற்கொலையில் உயிரை மாய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் அனைவருக்கும் புது வழியைக் காட்டியது தமிழக விவசாயிகளின் தில்லி முற்றுகை. இவை தமிழகம் கண்டிராத புதியன புனைதல். புதுப் பாய்ச்சல்கள்.
தற்போதைய காவிரி உரிமை மீட்பு - ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்களிலும் இப்புதிய ஆற்றல்களின் புதியன புனைதல், புதுப் பாய்ச்சல்கள் தொய்வு காணாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
09.04.2018 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள், “மக்கள் நாங்கள் வந்திருக்கிறோம்! நீங்கள் வெளியே வாங்க!” என்று கோஷமிட்டு தமது கோரிக்கைகளை கேட்க ஆட்சியரை அலுவலகத்தை விட்டு வெளியே வரவழைத்தது, இதுவரை சாத்தியமாகாத புதுமை.
ஐ பி எல் போட்டிகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும், இரு பிரதானக் கட்சிகளின் செல்வாக்கிலிருந்தும் விடுபட்ட கலைஞர்களின் வசம் வந்திருக்கும் திரைத்துறை அமைப்பினரும் ஒருமித்த குரலில் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டிருப்பதும் தமிழகம் கண்டிராத புதுமைகள்.
பழம் ஆற்றல்கள் – தேக்கங்கள் – போலச் செய்தல்
இப்புதிய ஆற்றல்களின் புத்தெழுச்சியைக் கண்டு, கால் நூற்றாண்டுகால உறக்கத்திலிருந்து விழித்து “யானை மேல் அம்பாரி ஏறி” அசைந்து ஆடி உலாவரத் துவங்கியிருக்கின்றன பழம் ஆற்றல்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்னர், கொள்கைத் திருவோடு ஏந்தி மக்கள் மன்றத்தின் முன் நின்ற இவ்வாற்றல்களின் வானளாவிய கொள்கைகள் தங்கத் தகடுகளின் முன் தேய்ந்து, புதியன புனையும் ஆற்றல் இழந்து, வீச்சிழந்து, தொய்ந்து, தேய்ந்து கிடக்கின்றன.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, சீறி வந்த இரயில் முன்பாக, மதுரை மாநகர் இளைஞர்கள், உயிரைத் துச்சமென மதித்து பாய்ந்ததைக் கண்டு அரண்டவர்கள், இப்போது இரயில் நிலையங்களில் மூச்சிரைத்து நிற்கும் எஞ்சின்களின் முன்பாக உரக்க கோஷமிடுகின்றனர். 04.04.2018 அன்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய இரயில் மறியல் போராட்டங்களில் இது அரங்கேறியது.
தில்லியை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து தமது வாழ்வின் நிலையை உலகுக்கு உணர்த்த முற்பட்டனர். 04.04.2018 அன்று கோவையில் சாலை மறியல் நடத்திய திமுகவினரோ பொம்மை எலிகளைக் கடித்து, தம் மீது கவனத்தைக் குவிக்கின்றனர்.
தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டத் துணிவது ஏற்புடையதே என்றாலும் சலித்து தேய்ந்து போனதொரு வடிவம்.
கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு அதிலும் புதுமை புனைந்துள்ளனர் புதிய ஆற்றல்கள். மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலம் வருவது, மறைந்த முதல்வர் எம் ஜி ஆரின் “நாடோடி மன்னன்” படப் பாடலை போலச் செய்தல்.
இப்பழம் ஆற்றல்கள், புதிய ஆற்றல்கள் புனைந்த புதிய வடிவங்களை போலச் செய்வதும் பழையனவற்றையே திரும்பத் திரும்பச் செய்வதும் ஏன்?
ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்ப்பில் மென்மை காட்டுவது, இதற்கான காரணத்தை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனுக்குச் சொந்தமானது என்பது ஒன்றும் “தங்க மலை ரகசியம்” அன்று.
சுரங்கம் தோண்டத் “தங்க மலைகள்” கைவசம் இருக்கையில் புதியன புனைதல் எங்ஙனம் எழும்! புதியனவற்றை போலச் செய்தலும் பழைய “நாடோடி மன்னன்” பாடலை மீண்டும் போலச் செய்தலுமே தொடரும்.
புதியன புனைதலும் போலச் செய்தலும்
எந்தவொரு சமூகத்திலும் மாற்றத்தின் உந்துசக்தியாக இருப்பது புதியன புனைதலே (Invention/Innovation).
சமூகத்தில் முன்னேறிய நிலையில் இருப்போரே புதியனவற்றைப் புனைகின்றனர். ஜனநாயக நெறிகள் வலுப்பட்டிருக்கும் சமூகங்களில், சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருப்போருக்கும் புதியன புனையும் சாதகமான நிலைமைகள் கூடுகின்றன. முன்னேறிய நிலைமைகளில் இருப்போர் அப்புதியனவற்றை மௌனமாக (சங்கடத்துடன்) ஏற்றுக்கொண்டு, போலச் செய்வதும் (Imitation) நிகழ்கிறது. புனையப்பட்ட புதியன போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறுகிறது.
புதியன புனைதல் புதிய ஆற்றல்களால் முன்னெடுக்கப்பட்டு, போலச் செய்தல் மூலமாக சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறும்போது, சமூகம் புதிய நிலைகளுக்குச் செல்கிறது.
பழைய ஆற்றல்கள் புதியனவற்றை தம் வயப்படுத்திவிடும்போது, சமூகம் பழைய நிலைமைகளில் தேங்கிவிடுகிறது.
இந்த எச்சரிக்கை தமிழ் சமூகத்திற்கு இன்று மிக மிக அவசியமானது.
தொடர்புக்கு : mathi2006@gmail.com
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago