குருப்பெயர்ச்சி பலன்கள்; கும்ப ராசி அன்பர்களே! கூடுதல் சம்பளத்தில் வேலை; மருத்துவச்செலவு குறையும்; சுபச் செலவு உண்டு; அலைச்சல் உண்டு; வருமானமும் உண்டு! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

உயர்ந்த குணமும் பண்பும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப்போகிறது என்று பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலிருந்த குரு பகவான், தற்போது விரய ஸ்தானமான 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். குருபகவான் உங்கள் ராசிக்கு 2க்கும் 11-ம் அதிபதியாக இருப்பவர். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது நிச்சயமாக வீண் விரயங்களை அதிகம் தரமாட்டார். சுபவிரயங்கள் மட்டுமே செய்வார் என முழுமையாக நம்பலாம்.

சுபச்செலவுகள் நடக்கும். அதாவது, திருமணம், சொந்த வீடு வாங்குதல், வீடுகட்டுதல், தொழில் தொடங்குதல், ஏற்கெனவே செய்கின்ற தொழிலுக்கு முதலீடுகளை அதிகப்படுத்துதல், வியாபார வளர்ச்சிக்காக, வியாபாரத்தை விரிவுபடுத்த, புதிய கிளைகளைத் தொடங்குதல் போன்றவை நடைபெறும்.

குடும்ப நலனுக்காக இன்சூரன்ஸ் போன்ற முதலீடுகள் செய்வீர்கள். குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துதல், காதணி விழா நடத்துதல் போன்றவைகளை செய்வீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதும், அலுவலகப் பணிகளை விடுத்து சொந்தமாகத் தொழில் தொடங்குவது போன்ற முயற்சிகளும் நடக்கும். இது போன்ற சுப விரயங்கள் நடக்குமே தவிர, அநாவசியச் செலவுகள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு.

முழுமையான விவரங்களை இப்போது பார்ப்போம்.

பனிரெண்டாம் இடத்திற்கு குரு பகவான் வரும் பொழுது உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவானும் விரய ஸ்தானத்தில் இருப்பது கூடுதல் பலம். இந்த சனி பகவான் நிச்சயமாக உங்களுக்கு வீண் செலவுகளையும், அனாவசிய செலவுகளை தர மாட்டார் என நம்பலாம். அவரோடு இணைந்து குரு நிச்சயமாக பெரிய அளவிலான விரயங்களைத் தரமாட்டார். சுப விரயங்களை அதிகப்படுத்தித் தருவாரே தவிர, அசுப விரயங்கள் நிச்சயமாக இருக்காது. ஆனாலும் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கும். பணி நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டியது வரும்.

நீண்டகாலமாக விற்க முடியாத சொத்துகளை இப்போது விற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதே போல அப்படி விற்கின்ற சொத்துகளில் மீதியாகும் பணத்தில் புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு. மருத்துவமனைச் செலவுகள் இனி படிப்படியாக குறையும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் இப்போது நலம் பெற்று வீடு திரும்புவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் .உங்களுக்கு திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால், உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். பாதியில் நின்ற கட்டடப் பணிகள் இப்போது தொடரும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர ஒற்றுமை பலமாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் இதுவரை சுகவாசியாக இருந்தவர்களுக்கு இனி பணிச் சுமை அதிகமாகும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதற்கு முன் இருந்த மாதிரியான சூழல் இருக்காது. கூடுதல் பொறுப்புகளின் காரணமாக பணியாளர்களை வேலை வாங்குவது, அவர்கள் செய்த வேலைகளில் திருத்தம் மேற்கொள்வது, புதிய பணிகளை பகிர்ந்தளிப்பது போன்ற பரபரப்பான சூழ்நிலைகள் உருவாகும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சிறப்பாகவே அமையும்.

அலுவலகப் பணி நிமித்தமாக பயணங்கள் அதிகம் ஏற்படும். ஒருசிலருக்கு அலுவலகப் பணிகளில் ஒருவித சலிப்புத் தன்மை ஏற்பட்டு, சுயமாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சியும் சாதகமாக இருக்கும்.

சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பரபரப்பாக இயங்கி பலவித ஒப்பந்தங்களும், நானாவித நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யவும் வாய்ப்புகளும் ஏற்படும். இதன் காரணமாகவே அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதித் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.

பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். ஆனாலும் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். அளவான முதலீடுகளைச் செய்யுங்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கும், கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கும் சிறப்பான வருமானம் காத்திருக்கிறது. அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய வியாபார வாய்ப்புகளைப் பெறுவது, கிளைகளைத் தொடங்குவது போன்றவை நடக்கும். ஆடை ஆபரண வியாபாரம், அலங்காரப் பொருட்கள் விற்பனை, ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, மளிகைக் கடை, உணவகம் போன்ற வியாபாரக் கடை நடத்துபவர்களுக்கு வருமானம் இரு மடங்காக பெருகும். அதேசமயம் வருகின்ற வருமானத்தில் விளம்பரச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் என செலவுகளும் அதற்கேற்றாற்போல் இருக்கும்.

வியாபாரத்திற்காக புதிய ஆட்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் கொடுப்பது போன்ற விஷயங்களால் செலவுகள் அதிகமாகும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி மாற்றங்கள் நடக்கும். இது தேர்தல் நெருங்குகின்ற காலம் என்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் சோர்வு, உடல் அசதி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும்.

கலைத் துறையினருக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடிவரும், திரைத் துறை சார்ந்தவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு அற்புதமான பலன்கள் நடக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். பூர்வீகப் பரம்பரை சொத்துகளும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆனாலும் புதிய நபர்களுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவலைகளைக் கொட்டித் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு முகம் தெரியாத நபர்களிடம் உங்களுடையப் பிரச்சினைகளை பகிரக் கூடாது. புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். அவர்களிடமிருந்து விலகியே இருங்கள். அவர்களால் பிரச்சினைகள் வரக் காத்திருக்கின்றன. எனவே புதிய நட்புகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். அடகு வைத்த நகைகளை மீட்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய சிறு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு இப்போது காலம் கனிந்து விட்டது, இப்போது முயற்சி எடுத்தால் வெளிநாடுகளில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கு தகுந்த ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். பதவி உயர்வும் கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டு. ஒரு சில அத்தியாவசியமான உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல் தொடர்பான செய்திகளில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதனால் கிடைக்கக்கூடிய பெயர் புகழ் உங்களுக்கு சமுதாயத்தில் உயரிய அந்தஸ்தைக் கொடுக்கும்.

பொதுவாக கும்ப ராசிக்காரர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறைவாக இருக்கும் என்று சொன்ன அதேவேளையில், புதிதாக ஏதாவது ஒரு பாதிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காரணம் நான்காம் இடத்தில் இருக்கும் ராகு பகவான், அவர் சுக ஸ்தானத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்ட வேண்டும். உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை தவறாமல் செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக மருந்து உட்கொள்பவர்கள் தவறாமல் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சொத்துகள் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கிடைக்கிற பங்கில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் தாயாரின் உடல்நலத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

அக்கம்பக்கத்தினருடன் எல்லைப் பிரச்சினை தொடர்பான சண்டை சச்சரவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பொது மனிதரை வைத்துப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் - திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர்

ஏழைப் பெண்களுக்கு அவர்களின் திருமண வாழ்வுக்குத் தேவையான சீர்வரிசைப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்ல பலன்களை தரும். குறிப்பாக கட்டில் மெத்தை, திருமாங்கல்யம், திருமண உடை போன்றவற்றை வாங்கி தருவது நல்ல பலன்களைத் தரும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

12 mins ago

ஆன்மிகம்

22 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்