பள்ளி தினசரி வகுப்பு குறித்து அமைச்சர் தகவல் :

பள்ளி தினசரி வகுப்பு குறித்து அமைச்சர் தகவல் :
Updated on
1 min read

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து டிச.25-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடப்பாண்டு 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும். முன்னதாக, அவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முன்திருத்த தேர்வுகள் நடத்தப்படும்.

பள்ளிகளில் தற்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜன.3-ம் தேதியில் இருந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தினசரி வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், டிச.25-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைகூட்டத்துக்குப் பின், பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்பட உள்ளது.

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்பது தெரியவரும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in