

தேர்தல் அறிக்கைக்காக அனைத்து தொகுதி மக்களிடமும் பாஜக கருத்து கேட்கிறது. இதற்காகபொதுமக்கள் முன்னிலையில் பெட்டி வைக்கப்பட்டு, மக்கள் தங்களது கோரிக்கைகளை எழுதி அதில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில், "உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை" என்ற முழக்கத்துடன் பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சி தொடக்க விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக தமிழக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்பதை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் பிரச்சார வாகனத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்பெட்டியில் "உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி இப்பெட்டியில் போடலாம். அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிபாஜகவின் பிரசார வாகனங்களையும் கட்சி நிர்வாகிகள் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.