

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த உமேஷ் சர்மா என்பவர், ‘சமச்சார் பிளஸ்' என்ற பெயரில் செய்தி சேனல் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 24-ம் தேதி இவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் மீது ஊழல் புகார் கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக பணியாற்றிய திரிவேந்திர சிங், அம்மாநில அரசின் பசு சேவா ஆயோக் தலைவராக அம்ரித்திஷ் சவுகான் என்பவரை நியமிக்க மறைமுகமாக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எவ்வித விளக்கமும் கோராமல் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.