பேணி பிரசாத், வினய் கட்டியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பேணி பிரசாத், வினய் கட்டியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதற்காக, மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா, பாஜக தலைவர் வினய் கட்டியார் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசுக்கு வரும் சனிக்கிழமைக்குள் இருவரும் பதில் அளிக்க வேண்டும், தவறினால் மேற்கொண்டு எவ்வித அறிவிப்பும் இல்லாமல் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில் தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பேணி பிரசாத் வர்மா, வினய் கட்டியார் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'நரேந்திர மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். குண்டர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அவரது அடிமை' என அண்மையில் மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா பேசியிருந்தார். ஏற்கெனவே, பேணி பிரசாத் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி பிரச்சார கூட்டத்தில் பேசிய பேணி, ராகுல் காந்தி பிரதமரானால், குஜராத் கலவரத்தில் ஈடுபட்டதற்காக மோடியும் அவரது நண்பர் அமித் ஷாவும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறியிருந்தார்.

மோடி பிரதமரானால் முசாபர்நகர் கலவரம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு உ.பி. அமைச்சர் ஆசம் கான் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார் என, வினய் கட்டியார் கூறியிருந்தார்.

பேணி பிரசாத், வினய் கட்டியாரின் இத்தகைய சர்ச்சை கருத்துகளுக்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இருவருக்கும் அவர்கள் பிரச்சாரத்தில் பேசியதற்கான சி.டி. ஆதாரமும் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in