குறட்டை ஏன் ஏற்படுகிறது?
உறங்கும்போது தொண்டையில் மூச்சுக் குழல் தசைகள் தளர்ந்து சுவாசப்பாதையின் அளவு குறுகிவிடும். குறுகிய பாதை வழியாகச் சுவாசக் காற்று பயணிக்கும்போது எழும் சத்தமே குறட்டை.
சில வேளை, மல்லாந்து உறங்கும்போது, தளர்வுநிலையில் உள்ள நாக்கும் சிறிது உள்வாங்கி தொண்டைக்கு வந்துவிடும். இதனாலும் குறட்டை வரும்.
உடற்பருமன், தைராய்டு, சைனஸ், சளி, ஜலதோஷத்துடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் அழற்சி, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை குறட்டைக்குப் பாதை போடும்.
குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், கூடிக்குறைவதோடு திடீரென்று அறவே சத்தமில்லாமல் போவதை ‘உறக்க மூச்சின்மை’ என்கிறோம். இதுதான் ஆபத்தானது.
‘உறக்க மூச்சின்மை’யை உறுதிசெய்ய ‘உறக்கப் பரிசோதனை’ இருக்கிறது. குறட்டையினால் சுவாசம் தடைபடுகிறதா, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறதா என்பதை தெரிவிக்கிறது.
உறக்க மூச்சின்மை ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், லேசர் அறுவை சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம்.
பாதிப்பு தீவிரமாக இருந்தால், ‘சிபாப்’ எனும் முகமூடியை உறங்கும்போது அணிந்துகொள்வதுதான் சிறந்த வழி. | தொகுப்பு: கு.கணேசன்