யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினம் யானை. சிங்கம் நேருக்குநேர் தாக்க வந்தால் யானை வென்றுவிடும். வலிமையானது யானை.
ஏன் யானைகள் பிளிறுகின்றன? யானைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. பிளிறலும், தும்பிக்கை அசைவும், காது அசைவும் அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.
யானை பிளிறும் சத்தம் கேட்டால் நமக்கு அச்சமாக இருக்கும் அல்லவா? ஆனால், ‘வ்ஹாஹாஹான்ன்ன்ன்’ என்கிற பிளிறலுக்கு ‘ஹலோ’ என்று அர்த்தம்.
யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வசிக்கும். அந்தக் கூட்டங்களுக்குப் பெண் யானைகளே தலைமை வகிக்கின்றன.
மூத்த பெண் யானை கூட்டத்தின் தலைவியாக இருக்கும். ஆண் யானைகள் தனியாக வாழ்ந்து, சில நேரம் மட்டுமே கூட்டத்துடன் வந்துசேர்கின்றன.
காட்டுக்குள் பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக் கேட்கிறது.
குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.
தொலைவில் உள்ள யானைகளுடன் பேசக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை யானைகள் எழுப்புகின்றன. இதற்கு ‘இன்ஃப்ராசோனிக் அதிர்வுகள்' என்று பெயர்.
‘இன்ஃப்ராசோனிக்’ அதிர்வுகள் நீண்ட அலை நீளம் கொண்டவை. இதனால் அவை, அடர்ந்த காடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
காற்று வழியாகச் செல்வதுபோல், நிலத்தின் வழியாகவும் பல கிலோமீட்டர் தூரம் இந்த அலைகள் பயணம் செய்யும்.
நிலத்தின் வழியே செல்லும் அதிர்வுகள் யானைகளின் கால்கள் வழியாக உடலுக்குள் சென்று, மூளைக்குச் செல்கின்றன. மூளை அந்த அதிர்வுகளைச் செய்தியாக உணர்கிறது.
எந்த யானை, எந்த மனநிலையில் இதை அனுப்பியுள்ளது என்று மற்ற யானைகளுக்குத் தெளிவாகத் தெரியும். ஆபத்து வரும்போது எச்சரிக்கை செய்கின்றன.
ஒலி, அதிர்வு மட்டுமல்ல, தொடுதலும் ஒருவிதமான தகவல் பரிமாற்றம்தான். அதில் யானைகளின் தும்பிக்கை ஒரு முக்கியமான தகவல் பரிமாற்றக் கருவி!
காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல. காது மடல்களின் அமைப்பின் மூலம் தன் உணர்வுகளையும் யானை வெளிப்படுத்துகிறது.
விரிந்த காதுகள் என்றால் ஆபத்து அல்லது எச்சரிக்கை என்று அர்த்தம்.
தளர்வான காதுகள் என்றால் அமைதியான மனநிலையில் இருக்கிறது.
காதுகளை அடிக்கடி அசைத்தால், யானை பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறது என்று அர்த்தம். | தகவல்கள்: நஸீமா ரஸாக்