தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்?

தமிழக சட்டப் பேரவை தொகுதிகள் வரிசைப் பட்டியலில் 59-வது தொகுதி தருமபுரி. 1951-ம் ஆண்டில் உருவான இந்த தொகுதியில் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய 2 ஒன்றியங்கள், தருமபுரி நகராட்சி மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

புகழ்பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோயில் இந்த தொகுதியில் அதியமான்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தருமபுரி நகரில் நெசவு, தீப்பெட்டி தயாரிப்பு, நெல் அரவை ஆலை, பட்டு நூல் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. மேலும், புளி பதப்படுத்தும் தொழில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

நகருக்கு அப்பாற்பட்ட பகுதி முழுவதும் விவசாய கிராமங்கள். இங்கு, சிறுதானியங்கள், கொண்டைக் கடலை, கரும்பு, நெல், வெற்றிலை, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களும், சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட மலர் பயிர்களும், வாசனை திரவிய எண்ணெய் தயாரிப்புக்கான மூலப்பொருளான பார்ம்ரோஸ் தைலபுல் ஆகிய பயிர் சாகுபடிகளும் நடைபெறுகிறது.

பால் வளத்துக்காக பசுக்கள் வளர்ப்பு, வருமானத்துக்காக குரும்பை ஆடு உள்ளிட்ட இன ஆடுகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொகுதியில் தொப்பூர் அருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது.

இந்த அணை மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2,000 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்டத்தில் 3,200 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை ஒருசில ஆண்டுகளில் மட்டுமே நிரம்புகிறது. இதர பகுதிகளில் ஏரி மற்றும் நிலத்தடி நீரின் மூலமே விவசாயம் நடைபெறுகிறது.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

பாசன நீர்வளத்துக்காக ஏங்கும் தொகுதி தருமபுரி என்பதால் இங்குள்ள விவசாயிகள் ஒகேனக்கல் காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்து ஏரிகளில் நிறைக்கும் திட்டத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய’ கதையாக, தருமபுரி நகரின் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏ.ரெட்டிஅள்ளியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு பல சிரமங்களை உருவாக்கி இருக்கிறது. முறையான கட்டமைப்புகள், முன்னேற்பாடுகள் போன்றவைகளில் கவனம் செலுத்த தவறியதே இப்பிரச்சினைகளுக்கு காரணம்.

மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை கோரிக்கைக்கு தற்போது தான் அரசு நிர்வாகம் முதல் செங்கல்லை தொட்டிருக்கிறது. இந்த கோரிக்கையில் படித்த இளையோர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அடங்கியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளபோதும் இதர பிரிவுகளையும் நவீனப்படுத்த வேண்டும், படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மலர் சாகுபடி விவசாயிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். மலர் கொள்முதல் நிலையம் அமைத்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய அரசு முன்வராதா என்ற ஏக்கம் இவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது.

பார்ம்ரோஸ் தைல புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வாசனை திரவிய எண்ணெய்யை இடைத்தரகர்கள் தலையீடின்றி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் அரசிடம் எதிர்நோக்குகின்றனர்.

அரசியல் வரலாறு

தருமபுரி சட்டப் பேரவை தொகுதி 18 முறை பொதுத் தேர்தலையும், 1965-ல் இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வெங்கடேஸ்வரன் 1 லட்சத்து 5,630 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட தடங்கம் சுப்பிரமணி 78 ஆயிரத்து 770 வாக்குகள் பெற்றார்.

தற்போது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக-வின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர், ஏற்கெனவே தருமபுரி நகராட்சி தலைவர், தருமபுரி எம்.எல்.ஏ, தருமபுரி எம்.பி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர்.

மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் பரிச்சயம், கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றுடன் அதிகாலையிலேயே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

தொகுதியில் அதிமுக-வும் பலம் மிக்க கட்சி. பாமக-வுக்கும் கணிசமாக தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இவைதவிர கூட்டணி கட்சிகளின் பலம், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி என்ற அடையாளம் ஆகியவற்றுடன் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தலட்சுமி, தவெக வேட்பாளர் சிவன், பாமக (ராமதாஸ் அணி) வேட்பாளர் சரவணன் ஆகியோரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான இளங்கோவன், சவுமியா ஆகியோருக்கு இடையில் தான் வலுவான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் வாக்காளர்களின் தேர்வு மருத்துவர் இளங்கோவனா? மருத்துவர் அன்புமணியின் மனைவி சவுமியாவா? என்பதை அறிய மே-4 வரை காத்திருப்போம்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,30,664

பெண் - 1,30,003

மூன்றாம் பாலினத்தவர் - 84

மொத்த வாக்காளர்கள் - 2,60,751

தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்?
கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in