யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? - சீனியர்களுக்கு ராகுல் ‘செக்’
காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி ஆகிறார் கிறிஸ்டோபர் திலக். இவரின் பெயர் அறிவிக்கப்படும் வரை, இப்படியொருவர் காங்கிரஸில் உள்ளார் என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படி ஒரு புதுமுகத்தை அறிவித்து திணறடித்தது காங்கிரஸ். கிறிஸ்துவ பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் திருச்சியை சேர்ந்தவர். இவரை தேர்வு செய்தால் தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்துவர்களின் கவனமும், பட்டியலினத்தவரின் பார்வையும் காங்கிரஸின் பக்கம் திரும்பும் என ராகுல் கணக்குப் போட்டுள்ளார். இதனால் ராஜ்யசபா சீட்டுக்கு சீனியர்களை கடந்து புதுமுகமான கிறிஸ்டோபர் திலக்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் ராகுல் காந்தி.
அண்மைக் காலமாக டெல்லியை மையமாக வைத்து வட இந்திய மாநிலங்களில் சுற்றி வரும் கிறிஸ்டோபர் திலக், தமிழக காங்கிரஸிலும் கள அளவில் பணியாற்றியவர். இளங்கலை பொறியியலும், முதுகலை மேலாண்மை படிப்பும் படித்த இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்த இவர், அக்கட்சியின் இளைஞர் பிரிவு, எஸ்சி, எஸ்டி பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். பின்னர் காங்கிரஸின் செயலாளராக உயர்ந்து பல மாநிலங்களில் மேலிடப் பொறுப்பாளராக இருந்தார்.
மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மேலிட பொறுப்பாளராக இருக்கும் இவர், ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்றிருந்தார். இதற்கு முன்னர் ஆந்திர தேர்தலின்போது மேலிடப் பொறுப்பாளராக இருந்தபோது, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது தங்கை ஷர்மிளா ரெட்டியை முன்னிறுத்தி, காங்கிரஸுக்கு கை கொடுத்தார். அதனால் ஆந்திராவை சேர்ந்த கே.ராஜூவின் நம்பிக்கையை பெற்று, ராகுல் காந்திக்கும் நெருக்கமானவராக மாறினார்.
கிறிஸ்டோபர் திலக் தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில தேர்தல்களிலும் தீவிர களப் பணி மேற்கொண்டதால் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் வரை எல்லா தலைவர்களுக்கும் பரிச்சயமானவர். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தியது ஆகியவற்றில் கிறிஸ்டோபர் திலக் முக்கிய பங்காற்றியவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
திமுக ஒதுக்கிய ஒரு ராஜ்ய சபா சீட்டை கைப்பற்ற தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களான கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுகரசர், சுதர்ன நாச்சியப்பன், ஜெயகுமார் உள்ளிட்டோர் நேரடியாகவே களமிறங்கினர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மூலம் வேகவேகமாக காய்களை அவர்கள் நகர்த்தினர். ஆனால் காங்கிரஸின் இளந்தலைவர் ராகுல் காந்தி, சீனியர்களுக்கு பதிலாக அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி கிறிஸ்டோபர் திலக் டிக் செய்யப்பட்டார்.
கிறிஸ்டோபர் திலக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சீனியர்களுக்கு பெரும் அதிருப்திதான் என்றாலும், இனி இப்படித்தான் நடக்கும் என்ற மெசேஜும் அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதேபோன்ற அதிர்ச்சி வைத்தியம் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இருக்கும் என்ற தகவலும் வெளியாகி ‘சீனியர்களுக்கு’ கிலியை உருவாக்கியுள்ளது.