2025-ல் தமிழகத்தை அதிரவைத்த சம்பவங்கள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவரானது ஒரு முக்கியமான அம்சம். கடைசியாக, 1982-87-இல் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் அந்தப் பதவியை அலங்கரித்தது நினைவுகூரத்தக்கது.
சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. கெடுவாய்ப்பாக அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தாகப் பதிவான இந்தச் சம்பவம், அரசியல்ரீதியாக திமுக அரசுக்கும் தவெகவுக்கும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் தனிப்படை காவலர்களால் கொல்லப்பட்டது காவல் மரணத்தின் கொடூரத்தை மீண்டும் அம்பலப்படுத்தியது. இது தமிழக அரசுக்கும் அவப்பெயரைப் பெற்று தந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
சமூக நீதி பேசும் மாநிலம் என்று தமிழகத்தைப் பற்றிய மதிப்பீடு இருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் நிகழும் சாதி ஆணவக் கொலைகள் அதற்குக் கரும்புள்ளியாகவே அமைகின்றன.
சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயது கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சாதி ஆவணக் கொலை செய்யப்பட்டார். சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிராக - வாக்கு அரசியலைத் தாண்டி - அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்னும் குரல்களும் அழுத்தமாக ஒலிக்கின்றன.
இந்தியாவின் முன்னோடித் திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. 2025-இல் 2,429 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ‘தாயுமானவர்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘அன்புக்கரங்கள்’ உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வரிசை கட்டின. தேர்தலை மனதில்கொண்டு இத்திட்டங்கள் தொடங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் 2023-இல் கைதாகி 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, உடனடியாக 2024-இல் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜிக்குப் பிணை வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்கிற முக்கியமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தீவிர எதிர்ப்பை அடுத்து பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை இந்த ஆண்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விவாதப் பொருளாக்கின. அதைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், திமுக அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்க்க அதைப் பயன்படுத்துவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மூன்று மாநில முதல்வர்கள், ஒரு துணை முதல்வர் பங்கேற்ற கூட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. என்றாலும் தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடைபெற்றாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.
திமுக - பாஜக இடையே இந்தித் திணிப்பு, தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டம் குறித்து இந்த ஆண்டில் அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெற்றுக்கொண்டே இருந்தன. இதன் நீட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்குப் பதிலாக ‘ரூ’ இடம்பெற்றது.
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் உள்ளிட்டவை அரசியல்ரீதியாகக் கவனிக்கப்பட்டன. அரிட்டாப்பட்டி சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசு நிறுத்தியது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக அமைந்தது. - டி.கார்த்திக்