கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? - ஓர் அலசல்

கேரள உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகள், 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 54 நகராட்சிகள், 79 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 505 கிராமப் பஞ்சாயத்துகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் இடதுசாரிகளின் எல்டிஎஃப் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020 தேர்தலில் எல்டிஎஃப் 5 மாநகராட்சிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதவிர 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 28 நகராட்சிகள், 63 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 340 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான என்டிஏ திருவனந்தபுரம் மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 26 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மக்களுக்குப் பாந்தமான வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பிரச்சாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 34 வார்டுகளில் வென்ற பாஜக, இத்தேர்தலில் 50 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. தனது பிரச்சாரத்தில் பாஜக யுடிஎஃப், எல்டிஎஃப் கூட்டணிகள் ஊழலின் கூடாரம் என்று விமர்சிப்பதை மிக முக்கிய அஸ்திரமாகக் கையில் எடுத்திருந்தது.

உள்ளாட்சி அமைப்புகளிடம் சேவை குறைபாடு மற்றும் செயல்திறன் குறைபாட்டை மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தது. அதேவேளையில் முன்பு எப்போதும் எந்தத் தேர்தலிலும் பேசும் ‘லவ் ஜிஹாத்’ போன்ற பிரித்தாளும் அரசியல் பிரச்சாரங்களை முழுக்க தவிர்த்தது. இவை திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதை விடவும் ஒரு நுணுக்கமான பிரச்சார உத்தியும் கவனிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் கவனம் செலுத்தியது. இந்தப் பகுதிகள் இந்துக்கள் வாக்கு பலம் கொண்டது. தனது பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு என்று திட்டமிட்டு செயல்படுத்தினாலும் கூட அதன் வீச்சு, கவனக் குவிப்பு இந்துக்கள் வாக்கு பலம் கொண்ட தெற்கு, மத்திய கேரளாவில் அதிகமாக இருந்துள்ளது.

பாஜகவின் உத்திகள் இந்து வாக்குகள் அதிகமுள்ள திருவனந்தபுரத்தில் ஒர்க் அவுட் ஆனது போல் முழுவீச்சில் பலிக்காவிட்டாலும் கூட பாலக்காடு, திருச்சூரிலும் கணிசமாக நகர்ப்புற இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளது.

ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிபிஎம் ஒருவித மிதமான இந்துத்துவத்தை கையில் எடுத்திருப்பதாக தேர்தலுக்கு முன்னரே விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதை உறுதி செய்யும்படியே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

முஸ்லிம் வாக்காளர்கள் நம்பகத்தன்மைவாய்ந்த மதச்சார்பற்ற கட்சி என்று அலசியபோது அவர்களுக்கு நல்ல மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்நின்றது எனலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இடதுசாரிகளின் தேசிய அரசியலைக் கூர்ந்து நோக்கும் அரசியல் பார்வையாளர்கள், கேரளாவை இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதுகின்றனர். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எல்டிஎஃப் தோல்வியைத் தழுவுமானால், 1970-க்குப் பின்னர் இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த மாநிலத்திலுமே ஆட்சியில் இல்லை என்ற நிலை திரும்பும் என்று கவலை தெரிவிக்கின்றனர். இது அமைப்பு ரீதியாக இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய அடியாக அவர்கள் பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அப்படியே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடித்தளமாகக் கருதி இப்போதிருந்தே உழைத்தால் கேரள அடுத்த சில ஆண்டுகளுக்கு பாஜக எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக கிராமப்புற பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை யுடிஎஃப் 505, எல்டிஎஃப் 340, என்டிஏ 26 என்பது பாஜகவுக்கு ‘மைல்ஸ் டூ கோ’ நிலைமை தான் என்றும் கேரள மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கணிக்கின்றனர். அதேவேளையில், எந்தச் சூழலிலும் பாஜகவின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அது கணக்கைத் தொடங்கிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை எனக் கூறுகின்றனர்.

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? - ஓர் அலசல்
It: Welcome to Derry - திகில் விரும்பிகளுக்கு திகட்டாத விருந்து | ஓடிடி திரை அலசல்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in