தவெகவின் ‘ரகசிய சர்வே’ வியூகம் எடுபடுமா?

தவெக தரப்பில் எடுக்கப்பட்டதாகச் சொல்லி தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது ஒரு சர்வே ரிப்போர்ட். தவெக தரப்பில் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ரகசிய சர்வேயின்படி, இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காதாம்.

மேலும், தவெக-வுக்கு 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சர்வே சொல்கிறதாம். 70 தொகுதிகளில் 40 சதவீத வாக்குகளும், 140 தொகுதிகளில் 25 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்குமாம், பெண்களில் 58 சதவீதத்தினரும் இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் 80 சதவீதம் பேரும் தவெக-வுக்கு கைகொடுப்பார்களாம்.

தொகுதிவாரியான சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 51 சதவீத வாக்குகளும் திருவள்ளூரில் 50 சதவீத வாக்குகளும் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதியில் 48 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்கலாம் என்று சொல்கிறதாம் சர்வே முடிவு. முதலில், திமுக-வுக்கும் தங்களுக்கும் இடையில் தான் போட்டி என ட்ரெண்ட் செட் செய்த தவெக, அதை பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாற்றியது.

கரூர் அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் தங்களின் அந்த முழக்கத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தி இருப்பார்கள். அந்தளவுக்கு தவெக தலைமை முகாமில் இருக்கும் வியூக வகுப்பு புள்ளிகள் விஜய்க்காக ஹோம்வொர்க் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் லேட்டஸ்ட் ஹோம்வொர்க் தான் இந்த சர்வே ரிலீஸ் என்கிறார்கள். அதேசமயம், “சுமார் 48 சதவீத வாக்குகளை திமுக கூட்டணியும் சுமார் 39 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணியும் சுமார் 8 சதவீத வாக்குகளை நாதக-வும் தங்கள் வசத்தில் வைத்திருக்கும் போது விஜய்க்கு 40 சதவீத வாக்குகள் வானத்திலிருந்து வந்து கொட்டுமா?” என்ற லாஜிக் கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

விஜய்க்காக ட்ரெண்ட் செட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வியூகப் புலிகளுக்கும் இது தெரியும். ஆனாலும் கரூர் துயரத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசு மீது பழியை தூக்கிப் போட்ட இவர்கள், தேர்தல் அரசியலில் என்னவெல்லாம் செய்தால் மக்களின் வாக்குகளை ஈர்க்க முடியும் என்பதையும் படித்துவைத்துக் கொண்டு அதற்கேற்ப காரியமாற்றுகிறார்கள்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in