பரந்தூருக்கு ‘குட்பை’... தாக்கம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமைவழி விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான எதிர்வினைகளை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் குழுவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்வரின் பெயரைச் சூட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மையமாக வைத்து காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட பல்வேறு கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களின் நிலை என்ன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
விமான நிலையத்தை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம், சென்னை பெங்களூரு விரைவுச் சாலையுடன் பரந்தூரை இணைக்கும் அணுகு சாலைகள் மற்றும் தென் மாவட்டங்களை எளிதில் சென்றடையும் நோக்கில் நடைபெற்று வரும் காஞ்சிபுரம் - கூட்டேரிப்பட்டு நான்கு வழிச் சாலைப் பணிகள் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், காஞ்சிபுரம் புறவழிச்சாலை விரிவாக்கம், உத்திர மேரூர் மற்றும் வாலாஜாபாத் வழித்தடங்களின் இணைப்பு, தொழிற்பூங்காக்கள் விரிவாக்கம் போன்றவை திட்டமிடப்பட்டிருந்தன.
விமான நிலையத் திட்டம் மாறினாலும், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தொழில் வளர்ச்சி தடைபடாமல் இருக்கவும் இந்த இணைப்புச் சாலைகள், நான்கு வழிச் சாலைப் பணிகள் மற்றும் மெட்ரோ திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். இது, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளைத் தகர்க்கும் பேரிடி” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்” என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்துக்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா?” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“புதிய இடம் எது என்பதையும் முதல்வர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்துக்கான இடத்தைத் தேர்வு செய்ய தாமதப்படுத்துவதால், தமிழகத்தின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது” என்று வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், “தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரூ, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்” என்று கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ், ‘எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரத்தை அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி பலிகொடுத்து உருவாக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.
தவாக தலைவர் வேல்முருகன், “ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் நீண்ட நெடிய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.