பிரேமலதா பக்கா ப்ளான்... அதிமுக கூட்டணி பக்கம் தேமுதிக போகாதது ஏன்?
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டதாகவும் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் வரை கொடுக்கவும் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் கொடுத்து வரும் காங்கிரசுக்கு திமுக ‘செக்’ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணி குறித்து பேசுவோர், “திமுகவிடம் 15 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள், தேர்தல் செலவு எனத் தேமுதிக பெரிய டிமாண்ட் வைத்தது. இதற்கு திமுக சம்மதிக்கவில்லை. இதே கோரிக்கையுடன் அதிமுகவை அணுகியபோது, அங்கும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையில், மத்திய அமைச்சர் பதவி உறுதி அளிக்கப்பட்டதால் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பிரேமலதாவும் அதேபோன்றதொரு முக்கியப் பொறுப்பை எதிர்பார்த்தார். இறுதியில் பாஜக இரட்டை இலக்கத் தொகுதிகள், ராஜ்யசபா சீட், தேர்தல் செலவுகளை ஏற்பதாகக் கூறியது.
இருப்பினும், சரத்குமார், விஜயதரணி ஆகியோரின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய நலம் விரும்பிகள், “பாஜகவை நம்பிச் சென்றால் இறுதியில் ஏமாற்றம் மிஞ்சலாம்” என்றனர். அதிமுகவும் ராஜ்யசபா சீட்தருவதாகக் கூறி ஏமாற்றிய கசப்பான அனுபவம் இருந்ததால், பிரேமலதா யோசிக்கத் தொடங்கினார். மறுபுறம், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியால் திமுக தலைமை அதிருப்தியில் இருந்தது. கே.சி.வேணுகோபால் சென்னையில் இருக்கும்போதே காங்கிரஸுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஸ்டாலின் விரும்பினார்.
உடனடியாக தேமுதிகவை இழுக்க வேலுவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து கல்லூரி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது, 6 முதல் 8 தொகுதிகள், உறுதியான ராஜ்யசபா சீட்" என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 12 தொகுதிகள் எதிர்பார்த்தார் பிரேமலதா. ‘எவ்வளவு தொகுதிகள் குறைகிறதோ அதற்குப் பதிலாக ‘இதர கவனிப்புகள்’ இருக்கும் என திமுக உறுதியளித்ததாக தெரிகிறது. இதற்கு பிரேமலதா சம்மதம் தெரிவித்தாலும், "நாள் நன்றாக இருக்க வேண்டும்" என்பதற்காக குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று அறிவிப்பை வெளியிட விரும்பினார். இதனால் ஒருநாள் தாமதமாக அறிவிப்பு வெளியானது. இல்லையென்றால் வேணுகோபால் இருக்கும்போதே அதிர்ச்சி கொடுத்திருப்பார்கள்" என்றனர்.