ஈகோ மோதலில் அமைச்சர்கள்? - தூய்மைப் பணியாளர் பிரச்சினை பின்புலம்

அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அத்துடன், ‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி எண் 285-ல் திமுக தெரிவித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாக நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான், கடந்த சில நாட்களாகவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அரசு அணுகும் விதம் தொடர்பாக உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்தார். “தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலும் பெண்கள்தான் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடி நோயால் உயிரிழந்தவர்களின் மனைவி என்றுள்ளனர். அவர்களுக்கு இந்த 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகவும் முக்கியம்.

ஏற்கெனவே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அது நினைத்தால் எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யலாம் என்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. அப்படியிருக்க மாநகராட்சி ஊழியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்துவிட்டு, தூய்மைப் பணியை தனியாருக்கு அரசு தாரை வார்த்ததால் பணி நிலைப்பும் இல்லாமல், உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் பணி செய்ய வேண்டும். அதுவும் புதிய பணியாளரைப் போல் பணி செய்ய வேண்டும்.

மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்கள் ப்ராஜக்ட் உள்ள எந்த இடத்துக்கும் வேண்டுமானால் இந்த தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்ய முடியும். மேலும், ஊதியத்தையும் குறைக்க முடியும். இது எல்லாம் ஒரு கடைநிலை ஊழியருக்கு நேருமென்றால், அதை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால் அது அநியாயம் இல்லையா? அரசாங்கம், சென்னையில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பெருந்தொகையை விட சொற்பமான செலவே ஆகும்.

எங்களுடைய பிரதான கோரிக்கை... சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தாண்டியும் பணியில்லாமல் 1500-க்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாது தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

செவிலியர்கள் போராடினால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது? இவர்களைத்தான் பணிநீக்கம் செய்து தூக்கி எறிந்துவிட்டோமே; இனி எதற்கு ஆவார்கள் என்ற மனப்பான்மையா? இவர்களால், தேர்தல் நேரத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஏளனமா என்று தெரியவில்லை.

சென்னையில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். இதை அரசும் உணர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட அரசே விரும்பினாலும் கூட, யாரோ சில அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைகள் இருக்குமோ என்றளவுக்குக் கூட யோசிக்கத் தூண்டுகிறது.

எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றை தன் பொறுப்புக்குள் வைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையேயான ஈகோவும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை இழுபறியாக இருக்கக் காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நான் கடந்த டிசம்பர் 18 அன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன். அவர் டிசம்பர் 21-க்குப் பிறகு மீண்டும் சந்திப்பதாக சொன்னார். அதன் பின்னர் ஒரு வாரம் ஆகியும் கூட இதுவரை எந்தவித அசைவும் அந்தப் பக்கம் இருந்து இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

ஒருவேளை ஈகோ பிரச்சினைதான் இழுபறிக்குக் காரணம் என்றால் இதை முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டுத் தீர்க்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்களுக்கு அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை, நாங்கள் அரசு விரோதிகள் இல்லை. தூய்மைப் பணியாளர்கள் பரம ஏழைகள், பெரும்பாலும் பட்டியலின மக்களாக உள்ளனர். சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்” என்கிறார் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி.

ஈகோ மோதலில் அமைச்சர்கள்? - தூய்மைப் பணியாளர் பிரச்சினை பின்புலம்
2025-ல் இந்திய அரசியல் அதிர்வுகள் எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in