மதிமுக ‘சீட்’ கண்டிஷன் - திமுகவுடன் மல்லுக்கட்டு?
“ஆட்சி அதிகாரத்தில் மதிமுக ஒருபோதும் பங்கு கேட்டதில்லை; இனியும் கேட்க மாட்டோம்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்கூட்டியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாலும், இம்முறை 12 தொகுதிகளை திமுக-விடம் கேட்டுப் பெற்றாக வேண்டும் என்பதில் மதிமுக-வினர் மல்லுக்கட்டுக்கும் தயாராய் இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக 12 தொகுதிகளைக் கேட்க மதிமுக தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள். இது குறித்துப் பேசிய தாயகப் புள்ளிகள், “2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றோம். இந்த முறை, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதில் நிர்வாகிகள் கடும் அப்செட்.
சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு ராஜ்ய சபா சீட் தரப்படாததால் இம்முறை 12 இடங்களைக் கேட்க வேண்டும்” என மாவட்டச் செயலாளர்கள் கண்டிப்புடன் பேசினார்கள். வைகோவும் ‘திமுக குழு அமைத்ததும் பேசுவோம்’ எனச் சொல்லி இருக்கிறார்.
இதனிடையே தனிப்பட்ட முறையில் துரை வைகோ எடுத்த சர்வேயில் வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 தொகுதிகளில் மதிமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த 12 தொகுதிகளை தரவேண்டும் அல்லது கடந்த முறையைப் போலவே 6 இடங்களை ஒதுக்குவதுடன் ஏப்ரலில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் ஒன்றையும் பொதுச்செயலாளருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என திமுக-விடம் கேட்பதாக இருக்கிறது தலைமை” என்றனர்.