6 சீட் + டார்ச் லைட்... திமுக கூட்டணியில் கமல் கட்சி கறார் ப்ளான்!
அண்மையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் குழுவில், “பூத் கமிட்டிக்கு அஞ்சு பேரைக் கூடப் பிடிக்க முடியலையே... நான் தோற்றுப்போன அரசியல்வாதி” என கமல் எமோஷனலாகப் பேசியது மய்யத்தினரை அதிர வைத்தது. இதையடுத்து, ‘திட்டினால் மட்டும் போதாது தலைவரே... தேர்தலில் நமக்கான பங்கை கேட்டு வாங்கினால் தான் கட்சி வளரும்’ என நிர்வாகிகள் இப்போது கமலுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் சிலர், “பொதுக்குழுவில் கமல் பேசியதை பார்த்து நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். மக்கள் நம்மை ஆதரிக்க வேண்டும் என்றால் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பிறகு சொந்த சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். இதையெல்லாம் விட்டுட்டு எங்களைத் திட்டினால் கட்சி எப்படி வளரும் என பலரும் தலைவரிடம் தங்களது ஆதங்கத்தை கொட்டினர். இதையடுத்தே கட்சி இப்போது முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
அதன்படி, வரும் தேர்தலில் ஆறு தொகுதிகளில் நிற்க வேண்டும். அதுவும் சொந்தச் சின்னமான டார்ச்லைட் சின்னத்தில்தான் களமிறங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். இதற்காக மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்தி அல்லது தெற்கு என எங்களுக்கான தொகுதிகளை தயாராக வைத்திருக்கிறோம். விரைவில் இதுபற்றி முதல்வருடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார் கமல்” என்றனர் மநீம நிர்வாகிகள்.
இது குறித்து மநீம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டதற்கு, “கடந்த முறை 10 லட்சம் வாக்குகள் வாங்கினோம். தலைவரின் இமேஜ் உலகறிந்தது. அதனால் இம்முறை திமுக கூட்டணியில் நியாயமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்போம். சொந்தச் சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருக்கிறோம். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.