பாஜக ‘சாதித்தது’ எப்படி? @ மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்
மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மட்டுமே அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பின்னடைவை சந்தித்து உள்ளன.
மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளில் மொத்தம் 2,869 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 1,421 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு 367, காங்கிரஸுக்கு 327, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 173, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 161, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 29, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவுக்கு 13 வார்டுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக அரசியல் நோக்கர்கள் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தன. மும்பை மாநகராட்சி தேர்தலில் மட்டும் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பல்வேறு மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி கட்சிகள் எதிரெதிர் அணியாக போட்டியிட்டன.
இந்தச் சூழலில்தான் பாஜக மட்டும் அபார வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளில், 17 மாநகராட்சிகளில் அந்தக் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஷிண்டே கட்சியுடன் இணைந்து மும்பை உட்பட மேலும் 8 மாநகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. ஒரு காலத்தில் மும்பை, தானே பிராந்தியங்களில் பால் தாக்கரேவின் சிவசேனா மிகவும் வலுவாக இருந்தது. சிவசேனா உடைந்த பிறகும் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவுக்கு இந்த பிராந்தியங்களில் செல்வாக்கு நீடித்தது.
ஆனால், தற்போதைய தேர்தலில் மும்பை, தானே பிராந்தியங்களில் தாக்கரே குடும்ப கட்சிகளை பின்னுக்கு தள்ளி அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்து இருக்கிறது. மகாராஷ்டிராவின் புனே, சோலாப்பூர், கோலாப்பூர் பிராந்தியங்களில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த கட்சி உடைந்த பிறகு சரத் பவார், அவரது தம்பி மகன் அஜித் பவார் இந்த பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தற்போதைய மாநகராட்சி தேர்தலில் சரத் பவாரும் அஜித் பவாரும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் இருவருமே பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். புனே, சோலாப்பூர், கோலாப்பூரில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மட்டுமே அபார வெற்றி பெற்றிருக்கிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தானே மாநகராட்சியுடன் முடங்கி உள்ளது. மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்றவில்லை.
மாநகராட்சித் தேர்தலின்போது சிவசேனா உத்தவ் அணியின் வாக்குகள், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் வாக்குகள் பாஜகவுக்கு கைமாறி இருக்கிறது. இதன் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மட்டும் அபார வெற்றி பெற்றிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 144 வார்டுகளில் வென்று கவனம் பெற்றுள்ளது.
இக்கட்சிக்கு சிறுபான்மையினர் அதிகமாக வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், சிறுபான்மை வாக்குகளை வழக்கமாகப் பெற்ற காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில், 2017-ம் ஆண்டை விட இந்த முறை ஏஐஎம்ஐஎம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை மாநகராட்சியின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாக கோவண்டி உள்ளது. இதன் 6 வார்டுகளையும் வழக்கமாக வெல்லும் சமாஜ்வாதியிடமிருந்து ஏஐஎம்ஐஎம் பறித்துள்ளது.
சாம்பாஜி நகர் எனப் பெயர் மாறிய அவுரங்காபாத்திலும் முஸ்லிம்கள் அதிகம். இங்கு காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெல்வது வழக்கம். ஆனால், இந்த தேர்தலில் ஒவைசியின் கட்சியின் வெற்றி பெற்று இரண்டாவது நிலையை பெற்றுள்ளது. 29 மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 144 கவுன்சிலர்களை வென்றதன் மூலம், ஒவைசி தனது பலத்தை நிரூபித்துள்ளார்.
இந்த முடிவுகளின் மூலம், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான கட்சி மாநில அரசியலில் தனது வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ளது, காங்கிரஸின் ராகுல் காந்திக்கும், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் இந்த எழுச்சி காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.