திமுக+ vs அதிமுக - பாஜக கூட்டணி... ‘கரன்சி’ திட்டம் என்ன?
விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை அண்மையில் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது திமுக அரசு. அடுத்ததாக இந்தப் பொங்கலுக்கு குடும்ப அட்டை தவறாமல் ரூ.3,000 பரிசு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலவரத்தைப் பொறுத்து இது ரூ.5,000 ஆகலாம் என்கிறார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக-வும் இந்தப் பொங்கலுக்கு பிரதமர் மோடியை தமிழகம் அழைத்து வருகிறது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு இன்னும் நெருக்கமாக முடியும் என நம்புகிறார்.
பிஹார் தேர்தலுக்கு முன்பாக, ‘முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்புத் திட்டம்’ மூலம், சுய தொழில் செய்வதற்காக சுமார் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்ததற்கும் ஆளும் கூட்டணி எதிர்பார்த்ததை விட கூடுதலான இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்கவைத்ததற்கும் இது முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.
இதை மனதில் வைத்து, “தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பிஹாரைப் போல அனைத்து மகளிருக்கும் சுய தொழில் தொடங்குவதற்காக தலா ரூ.10,000 வழங்குவோம்” என்பது போன்ற அறிவிப்பை என்டிஏ கூட்டணி இங்கேயும் அறிவிக்கலாம்.
இந்த நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க இரண்டு கூட்டணிகள் தரப்பில் இருந்தும் கவர்ச்சியான பல அறிவிப்புகள் வெளியாகலாம். அதேபோல், தேர்தலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கையிலும் ‘கரன்சி’ தொடர்பான அறிவிப்புகளை திமுக திணிக்கும். களத்துக்குப் புதியவரான விஜய்யும் இவர்களுக்கு நிகராக எதையாவது சொல்லாமலா போய்விடுவார் என்ற எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது.