
ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி திருச்சி மாவட்டம் - திருப்பராய்த்துறையிலுள்ள காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் எனும் புனித நீராடும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பராய்த்துறையிலுள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.30 மணி அளவில் காவிரியைச் சென்றடைந்தனர். தொடர்ந்து, அஸ்திர தேவருக்குத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் நீராடினர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. இதையொட்டி, காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.