எந்த ஒரு புதிய மாற்றமும் வெகுவிரைவாக எளிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அதே வேளையில், மாற்றத்தின் பாதிப்புகளும் அம்மக்களையே வேகமாக பாதிக்கின்றன.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வரலாறு காண அளவில் பொங்கி பிரவாகம் எடுத்தது யமுனை நதி.
ஹரியாணாவில் பெய்த கனமழையால் ஹத்னிகுண்ட் தடுப்பணையின் உபரி வெள்ள நீரை அம்மாநில அரசு டெல்லியின் யமுனை வழியாக திறந்து விட்டது. இதனால், ஏற்கனவே பொங்கிக்கொண்டிருந்த ஆம் ஆத்மி - பாஜக அரசியல் பனிப்போரை யமுனை நதிநீர் மேலும் வலுவேற்றி மாறிமாறி குற்றம்சாட்டி கரைபுரண்டோடச் செய்தது.
இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அதுவரை கட்டுப்பட்டு ஓடிய யமுனை கரைகொள்ளாமல் தாழ்வான இடங்களைத் தாண்டி டெல்லி நகர வீதிகளை எட்டிப்பார்க்க வந்தது.
வீதியெங்கும் வெள்ள நீர் நகரின், மேட்டுப்பகுதிகளிலும் தண்ணீர் என தலைநகரம் ஸ்தம்பித்தது. ஆனாலும், டெல்லியன்ஸ் வெள்ள நீரைக் கொண்டாடும் புதிய மழை வாழ்க்கைக்கு பழகத் தொடங்கினர்.
இயற்கையின் பெருங்கருணை, அரசு இயந்திரங்களின் விடா முயற்சி என யமுனையின் வெள்ளம் மெல்ல வடியத் தொடங்கியது.
அழையா விருந்தாளியாய் டெல்லியின் எளிய மக்களின் வீடுகளுக்குள் வந்த யமுனை தன் பரிசாக அதுவரை அடைகாத்து வந்த வண்டல்களை விட்டுச் சென்றிருக்கிறாள்.
வெள்ளநீர் சூழ்ந்திருந்த தெருக்களிலும் வீடுகளிலும் இப்போது களிமண் சகதிகள் சூழ்ந்திருக்கின்றன. வீட்டின் கட்டிலில் இருந்து இறங்கினால் கரண்டைக் காலைக் கவ்விக்கொண்டு நலம் விசாரிக்கின்ற யமுனை விட்டுச் சென்ற ச(ங்)கதி...
வெள்ளநீர் குடித்த தரை எப்படியிருக்குமோ தெரியாது, அதனால் மண்வெட்டி போட்டு வெட்ட முடியாமல் சாப்பாட்டு தட்டு கொண்டு மொண்டு ஊற்றவேண்டியிருக்கிறது சகதியை.
இடுப்பளவு தண்ணீரில் கூட நடந்து விட நீந்தி விட முடிந்ததது. ஆனால், கணுக்காலைக் கவ்வும் சகதியில், துணையில்லாமல், தடுமாறாமல் அடிவைக்க முடியவில்லை.
வெள்ளத்தின்போது வாய்கிழிய பேசிய யாரும் இப்போது சதியைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. எல்லா மற்றங்களும் எளிய மக்களை சுலபமாக பாதித்துவிடுகிறது. | படங்கள்: சுஷில் குமார் வர்மா.