90 அடி உயரமும் மூன்று நிலைகளும், கொண்டு திகழும் ராஜராஜன் திருவாயில் எனப் பெறும் இக்கோபுரம் முழுதும் கருங்கற்கட்டுமானமாக விளங்குகின்றது. இக்கோபுர கட்டுமானத்தின் அடித்தள அமைப்பான உபபீடம் எனும் பகுதியில் சிவபுராணக் கதைகள், கண்ணப்பர் வரலாறு போன்றவை சிற்பக் காட்சிகளாக உள்ளும் புறமும் இடம்பெற்றுள்ளன. உபபீடத்துக்கு மேலாக அதிஷ்டானத்திலிருந்து கபோதகம் வரை உள்ள சுவர்ப்பகுதியில் பெரும் வாயிலின் இருபுறமும் இரண்டு துவாரபாலகர் எனப்பெறும் வாயிற்காவலர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.