முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கலைத் துறை, அரசியல் வாழ்வில் கருணாநிதியின் பங்களிப்பு குறித்து திரைத் துறை பிரபலங்கள நினைவுகூர்ந்தனர்.
அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் முன்னாள்முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக திரைத்துறை சார்பில், ‘கலைஞர் 100’ என்னும் விழாசென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கருணாநிதி எழுதிய பாடல்களின் புதிய வடிவ நடனங்கள், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய தமிழ் சினிமாவில் கருணாநிதியின் வசனங்கள் குறித்த குறும்படம், ‘டிரம்ப்ஸ்’ சிவமணியின் இசை நிகழ்ச்சி என விழா களைகட்டியது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில், திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘கலைஞரின் வாழ்க்கை பயணம்’ குறித்த தசாவதாரம் குறும்படம் திரையிடப்பட்டது.
கருணாநிதியின் கலைத்துறை, அரசியல் வாழ்க்கையில் அவரது பங்களிப்பு குறித்து திரைத்துறையினர் விரிவாகப் பேசினர்.
‘கலைஞர் 100’ விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செய்திருந்தது.
சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் பல்வேறு வசதிகளுடன் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நவீன திரைப்பட நகரில் நவீன தொழில்நுட்ப அம்சங்களான வி.எஃப்.எஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, பெரிய எல்இடி வால், 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.