
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராஜேந்திர சோழன் உருவம் பொதித்த நாணயம் வெளியிட்டார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய 1000-வது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வந்தது.
நிறைவு விழா நிகழ்வில் பங்கேற்க திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் நண்பகல் 12.15 மணிக்கு பிரதமர் மோடி தமிழர் உடையான வேட்டி சட்டையில் வந்து இறங்கினார்.
பொன்னேரியில் இருந்து 2 கி.மீட்டர் தூரம் காரில் அமர்ந்தவாறும், நின்றவாறும் ரோடு ஷோவில் பங்கேற்றார். அப்போது. இருபுறமும் நின்ற பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.
பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கையின் புனித நீரைக்கொண்ட நடைபெற்ற அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பிறகு அங்குள்ள துர்க்கை அம்மனை வணங்கினார். பின்னர், விழா மேடைக்கு 1.40 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசினார். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோயில் ஓவியத்தை பரிசாக வழங்கினார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஓதுவார்கள் பாடல்கள் பாடினர். அப்போது இரு கரங்களையும் கூப்பியபடி பாடல் முடியும் வரை பிரதமர் மோடி அமர்ந்திருந்தார்.
இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சியில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டப்படி ரசித்து பார்த்தார். பின்னர், தான் இசையமைத்த திருவாசகம் ஆல்பத்தில் இடம்பெற்ற மாசற்ற ஜோதி பாடலை இளையராஜா பாடினார்.
இந்த விழா மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
ராஜேந்திர சோழன் நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் மோடி வெளியிட்டு பேசினார்.
“ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழரும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமை ஆகும். சோழ அரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் இந்தியாவின் வலிமையும், உண்மையான திறனையும் பிரதிபலிக்கிறது, சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் ஒரு பொற்காலமாகும்” என்றார் பிரதமர் மோடி.
“ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உலகம் முழுவதும் ஒரு கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது. சோழர்கள் இந்தியாவை கலாசார ஒற்றுமையின் நூலால் பின்னினர். இன்று நமது அரசு காசி - தமிழ் சங்கமம், சௌராஷ்டிர - தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம் இந்த பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துகிறது” என்றார்.
“புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பில், சிவாதீனங்களைச் சேர்ந்த முனிவர்கள் ஆன்மிக வழிகாட்டுதலுடன் நிகழ்ச்சியை நடத்தினர். தமிழின் ஆன்மிக அடையாளமான செங்கோல் நிறுவப்பட்டது. சைவ மரபுகள் இந்திய கலாசார அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. சோழர்களே அதன் முதன்மை கட்டியாளர்கள்” என்றார்.
“தமிழ்நாடு இன்று இந்த மரபு வாழும் மையமாக உள்ளது. சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சி இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழர் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார்” என்றார்.
“சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரங்கம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர். அன்று ராஜேந்திர சோழன் மாலத்தீவு சென்று வந்தார். நான் நேற்று மாலத்தீவு சென்று வந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் மோடி கூறினார்.
“ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூர, காசியில் இருந்து கங்கை நீர் இன்று மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது” என்றார்.
“சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் ஒரு வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை அதிக முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் இன்று இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்க்கின்றது” என்றார் பிரதமர் மோடி.
“ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோயிலை விட உயரமின்றி கோபுரம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும்” என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி திருமாவளவன், ஆட்சியர் பொ.ரத்தினசாமி, பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் க.சொ.க.கண்ணன், கு.சின்னப்பா, வானதி சீனிவாசன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.