
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் புதன்கிழமை (ஜூலை 16) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பேருந்து முனையம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
“மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் இருக்கும். நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும்” என்றார் அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், “கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அமைச்சர் தெரிவித்தார்.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் உணவுப் பொருட்களை சமைக்க அனுமதி இல்லை என்பதால், வெளியே சமைத்து இங்கு கொண்டு வந்து விற்பதால், உணவுப் பொருட்களை சூடாக வாங்க முடியவில்லை.
இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், முதல் தளத்திலிருந்து நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், முதல் தளத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இது பயணிகளை குழப்பமடையச் செய்கிறது.
கழிப்பறைகளில் தானியங்கி முறையில் இயங்கும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் தளத்தில் உள்ள ஆண்கள் சிறுநீர் கழிப்பறை வெளியே நிற்பவர்கள் பார்வையில்படும் விதமாக உள்ளதால், பயன்படுத்துபவர்கள், அவ்வழியாக செல்பவர்களுக்கு அசவுகரித்தை ஏற்படுத்துகிறது.
பேருந்து முனையம் திறப்பு விழா கண்டு 2 மாதங்கள் ஆகியும் நகரப் பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல் பலகை அமைக்கும் பணி இப்போதுதான் நடைபெறுகிறது. பேருந்து முனையத்தின் முதல் நுழைவு வாயில் பகுதியில் புறக்காவல் நிலைய கட்டுமானப் பணி இன்னமும் முடிவடையவில்லை.
பேருந்து முனையத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள்: 1) தூய்மை பணி மேற்கொள்ள 228 பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். 2) பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
3) பேருந்து முனையத்தில் ஏடி.எம் மையம் அமைக்கப்படாததால், 3 வங்கிகளின் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4) முதியவர்கள், நோயாளிகள் பயன்பாட்டுக்காக 3 பேட்டரி கார்கள் தயார் நிலையில் உள்ளன. 5) பேருந்து நடைமேடைகளில் பல்பொருள் விற்பனை பெட்டிக் கடைகள் உள்ளன.
6) பேருந்து முனையத்தின் அருகே ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7) பொருள்கள் வைப்பறையில் பயணிகள் தங்களது உடைமைகளை லாக்கரில் வைத்து பூட்டி சாவியை எடுத்துச்செல்லலாம். 8) தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் கொண்ட குழு 24 மணிநேரமும் தயார்நிலையில் உள்ளது.
9) பயணிகளின் தேவையைப் பொறுத்து பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் பேருந்து முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 10) பேருந்து நடைமேடைகளுக்கு அப்பால் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.