
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மேடையேற்றி, விஜய் தலைமையில் சென்னையில் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ஸ்ரீ, அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரை, தருமபுரியைச் சேர்ந்த செந்தில் ஆகியோரது குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமைய அலுவலகத்தில் விஜய் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம், உயிரிழந்தவர்களை எவ்வாறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர், உயிரிழப்புக்கு பின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதா, சம்பந்தப்பட்டவரின் இறப்புக்குப் பின்னர் குடும்பத்தினர் எதிர்கொண்ட பாதிப்புகள், குடும்பத்தின் தற்போதைய நிலை, வழக்கின் நிலை, காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கேட்டறிந்தார்.
இந்நிலையில், ‘சாரி வேண்டாம்... நீதி வேண்டும்’ என்ற முழக்கத்துடன் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மேடையேற்றியது தவெக.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், “திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி சொன்னார். நல்ல விஷயம் தான். ஆனால், உங்களின் ஆட்சியில் 24 பேர் காவல் நிலையங்களில் இறந்திருக்கின்றனர். அவர்களிடமும் சாரி சொல்லுங்கள். அவர்களுக்கும் நிதியுதவி வழங்குங்கள்” என்றார்.
“சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றிபோது விமர்சித்தீர்களே. இது தமிழகத்துக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இப்போது ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள். இப்போதும் சிபிஐ ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் கைப்பாவையாகத்தானே இருக்கிறது?” என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
“நாங்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை கேட்டதால், பயந்து போய் சிபிஐக்கு மாற்றியிருக்கிறீர்கள். ஏன் ஒன்றிய அரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்” என்றார் விஜய்.
“இன்னும் உங்கள் ஆட்சியில் எத்தனை அடாவடிகள்” என்ற விஜய், “அண்ணா பல்கலை. மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? முதல்வர் பதவி எதுக்குங்க சார்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
“அதிகபட்சம் உங்ககிட்ட வர்ற பதில், 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே... இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்க்கார், இப்போ சாரி மா மாடல் சர்க்காரா மாறிடுச்சு” என்று காட்டமாக கூறினார் விஜய்.
“இந்த இன்னபிலிட்டி அரசாங்கம் ஆட்சியை விட்டு செல்வதற்கு முன்பு, நீங்க செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமா சட்டம் ஒழுங்கை நீங்களே சரிசெஞ்சாகணும். இல்லன்னா, மக்களோடு மக்களா நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கு உண்டான போராட்டங்கள் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார் விஜய்.