
கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 6 பிரிவுகள் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை முதல் அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 190-ஐ கடந்துள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் 3000-க்கும் அதிகாமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், சேறு, சகதி, உருண்டு கிடக்கும் பாறைகள், மரங்கள், புதைந்த கட்டிடங்கள் என கடும் சவால்களுக்கு இடையே ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கன்னூரில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து நான்கு படை பிரிவும், 122 டிஏ பட்டாலியனும் மாநில மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றன.
எம்இஜி மையத்தில் இருந்து ஓர் அதிகாரி, ஒரு ஜெசிஓ, மற்றும் மூன்று ஓஆர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று, மேப்பாடி - சூரல்மலை சாலையை மறுசீரமைக்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் பாலம் அமைக்கத் தேவையான உதவிகளைச் செய்ய செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அங்கு சென்று சேர்ந்தது.
பாரா ரெஜிமெண்ட் பயிற்சி மையத்தின் அதிகாரி பிரிகேடியார் அர்ஜுன் சீகன் மற்றும் அவரது குழுவினர் செவ்வாய் இரவு 11 மணிக்கு வயநாடு சென்று சேர்ந்தனர். பாலம் அமைப்பதற்கு தேவையான இடங்களை அடையாளம் காண்பது, இந்திய ராணுவத்தின் ஹெச்ஏடிஆர் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையத்தினையும் அவர்கள் உருவாக்குவர்.
மருத்துவக்குழுக்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு படைகளின் (ஹெச்ஏடிஆர்) இரண்டு பிரிவுகள் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோட்டுக்கு இரவு 11 மணிக்குச் சென்று சேர்ந்தது. இவர்கள், புதன்கிழமை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வர்.
மெட்ராஸ் இன்ஜினியரிங் க்ரூப் அண்ட் சென்டரைச் சேர்ந்த இன்ஜினியரிங்க் டாஸ்க் ஃபார்ஸ், ஜெசிபி, டிஏடிஆர்ஏ மற்றும் 110 அடி பெய்லி பாலம் உள்ளிட்ட தளவாடங்களுடன் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்று சேர்ந்துள்ளது. இதன் மீட்பு பணிகள், சிறப்பு குழுவின் கணிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய கடலோரக் காவல் படையும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொச்சி மற்றும் பேப்பூரைச் சேர்ந்த கடலோரக் காவல் படையின் மீட்பு படைகள் வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடலோரக் காவல் படை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் ஆறு பிரிவு படைகளும் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளுடன் இணைந்து இன்றைய பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
மேப்பூர் - சூரல்மலை சாலை பாலம் கட்டும் பணிகளைத் தொடங்கும். இவற்றில் சில மண் அள்ளும் கருவிகளை வான்வழியாக மறுகரைக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளன.
தற்காலிக மரப்பாலம் அமைத்து ராணுவ மீட்புக் குழு முண்டக்கையை அடைந்துள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 4 குழுக்களாகப் பிரிந்து 150 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை மாலை வரை மொத்தம் 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் மட்டும் 82 நிவாரண முகாம்களில் 2,017 பேர் தங்கியுள்ளனர். மேப்பாடியில் உள்ள எட்டு முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்கியுள்ளனர்.
முண்டக்கை, அட்டமலை மற்றும் சூரல்மலா பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்று கூடுதலாக 132 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
96569 38689, 80860 10833 ஆகிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உதவிக்காக அறிவித்துள்ளது.
சூரல்மலாவில் ஒரு நேரத்தில் ஒருவர் செல்லும் வகையில் தற்காலிக பாலம் ஒன்றை ராணுவம் அமைத்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த ஆற்றில் சூரல்மலை - முண்டக்கை பகுதியை இணைக்கும் வகையில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தடைபட்டது.