திருநங்கைகளின் இஷ்ட தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவரை மணந்து, பூசாரிகளிடம் தாலிகட்டிக் கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர் | படங்கள்: எம்.சாம்ராஜ்
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறும். அப்போது திருநங்கைகளுக்கு மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நடப்பாண்டு சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்திருந்தனர்.
திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலுக்கு மணப்பெண் அலங்காரத்தில் வந்து, பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சுற்று வட்டார கிராம மக்களும் விழாவில் பங்கேற்றனர்.
இன்று காலை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவான் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு, பலியிடப்பட்டார். அப்போது திருநங்கைகள் அழுது, தாலியை அறுத்து விதவைக்கோலம் பூண்டனர்
இந்த நிகழ்ச்சியையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.