“இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் இருக்காது” - அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதி

“இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் இருக்காது” - அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதி
Updated on
1 min read

கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டின் நிலம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்நாத் சிங்கிடம் இலங்கை அதிபர் அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தலைநகர் கொழும்புவில் அவர் இன்று அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை விமானப்படைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆறு 'L70' ரக வான் பாதுகாப்பு பீரங்கிகளை நவீனமாக்கும் பணிக்கான நிதியை இந்தியாவே வழங்கி அதனை செயல்படுத்தும். இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கை, இலங்கையின் மிக முக்கிய தேசிய சொத்துகளுக்கான பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், ராணுவ மற்றும் கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே என்சிசி இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை முறைப்படுத்துவதற்கு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூர் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ராணுவப் பகுதிகளுக்குள் இந்திய ஆயுதப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களை இரு தலைவர்களும் காணொலி மூலம் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அதிபர் அநுர குமார திசாநாயக்க, “டிட்வா புயலால் இலங்கை பாதிக்கப்பட்டபோது நிவாரணப் பணிகளில் இந்தியா பங்கெடுத்துக் கொண்டது. ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கொண்ட நிவாரணப் பணிகளுக்கும், பேரிடருக்குப் பிந்தைய விரிவான மறுவாழ்வுத் திட்டங்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என உறுதிபட தெரிவித்தார்.

“இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் இருக்காது” - அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதி
நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in