

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்டவிரோதமானது என கூறி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால், இதற்கு மாற்று திட்டம் இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2-வது முறை அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் ட்ரம்ப் வரிகளை இஷ்டத்துக்கு உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மீதும் குறைந்தபட்சம் 10% வரி விதிக்கப்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான வரியை 50% ஆக உயர்த்தினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தனது இஷ்டத்துக்கு இந்த வரிவிதிப்பை ட்ரம்ப் உயர்த்தினார். இதை எதிர்த்து ‘லேர்னிங் ரிசோர்சஸ், வி.ஓ.எஸ் செலக்சன்ஸ் என்ற நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
சர்வதேச அவசரகால பொரு ளாதார அதிகாரச் சட்டத்தின் (ஐஇஇபிஏ) கீழ், ஒரு அதிபர் தனது நிர்வாக உத்தரவின் மூலம் இத்தகைய வரிகளை விதிக்க அதிகாரம் உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ஐஇஇபிஏ சட்டம் அதிபருக்கு வரிகளை விதிக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியது.
இந்த தீர்ப்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்த ஒரு நீதிபதி, ‘‘இந்தத் தீர்ப்பால் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை இறக்குமதியாளர்களுக்குத் திரும்ப அளிப்பது அரசுக்கு பெரிய ‘தலைவலியாக' இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், இதுவரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட 175 பில்லியன் டாலர் வரிப்பணத்தை அமெரிக்கா இறக்குமதி செய்த நாடுகளின் நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டி வரும். இது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மாற்றுத் திட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்ததையடுத்து, வரி விதிப்பு தொடர்பாகத் தன்னிடம் மாற்றுத் திட்டம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.