

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகத் திறக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். இது ஈரான் அணுஆயுதமேந்தா நிலையை உறுதி செய்யும் ஒரு வலுவான சுவராக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதுடன், அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவு, முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஈரானியக் கொள்கையைத் கடுமையாக சாடியுள்ள ட்ரம்ப், "ஈரானுடன் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். முந்தைய ஒபாமா அரசாங்கத்தைப் போல ஈரானுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களையோ அல்லது 1.7 பில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையோ இந்த முறை அமெரிக்கா வழங்காது. இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்காது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாகவும், எளிதாகவும், சுமுகமாகவும் நடக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதே நேரத்தில் ஈரானின் அணுஆயுதக் கட்டமைப்புகளை, குறிப்பாக நிலத்தடிப் பதுங்கு குழிகளில் உள்ள வசதிகளைச் சரியான நேரத்தில் அழிக்க அமெரிக்கா தயங்காது என்றும் எச்சரித்துள்ளார். இந்த ராஜதந்திர முயற்சி ஒருவேளை தோல்வியடைந்தால், ஈரானை ஒடுக்க அமெரிக்காவிடம் மிக உன்னதமான மாற்று வழிகள் எப்போதும் தயாராகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.