

வாஷிங்டன்: இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், மத்திய கிழக்கு நட்பு நாடுகளான இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 8.6 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ தடவாளங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய அவசரநிலை நிலவுவதை கணக்கில் கொண்டு, இந்த விற்பனைக்கான நாடாளுமன்ற ஆய்வுகளுக்கு விலக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, கத்தாருக்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரியாட் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் (APKWS) ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், குவைத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 147.6 மில்லியன் டாலருக்கு APKWS அமைப்பை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்தது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் காரணமாக தற்போது வளைகுடா நாடுகள் அதிகளவிலான ஆயுதங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.