“ஈரானுக்கு இதைவிட கொடூரமான பதிலடி காத்திருக்கிறது” - ட்ரம்ப் எச்சரிக்கை

“ஈரானுக்கு இதைவிட கொடூரமான பதிலடி காத்திருக்கிறது” - ட்ரம்ப் எச்சரிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். 

ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ், சாபஹார், ஜாஸ்க் மற்றும் சிரிக் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு அந்த நாட்டின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, "அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்காகப் பின்னர் நிச்சயம் வருத்தப்படும்" என்று எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் முயன்றதற்கும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமைக் குறிவைத்து 8 ஏவுகணைகளை வீசியதற்கும் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முயன்றால், இப்போது நடத்தப்பட்டதை விடப் பல மடங்கு கடுமையான மற்றும் மிக உயர்ந்த அளவிலான தாக்குதலை சந்திக்கும். அந்த தாக்குதல் முழுமையாக முடிந்த பிறகு, ஈரான் என்று சொல்லிக் கொள்ள அங்கு எதுவுமே மிஞ்சியிருக்காது" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானுக்கு இதைவிட கொடூரமான பதிலடி காத்திருக்கிறது” - ட்ரம்ப் எச்சரிக்கை
பிரதமர் மோடி இருக்கும் குழு படத்தை கத்தரித்த பாக். பிரதமர் - முழு படத்தை பகிர்ந்த இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in