

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்த முயற்சியை சில நாடுகள் தொடங்கியுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “மத்தியஸ்த முயற்சியை சில நாடுகள் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு ஒன்றை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அதேநேரத்தில் எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டு, மோதலைத் தூண்டியவர்களிடத்தில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டி உள்ளது. இதை நாம் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதற்கு ஈரான் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
கடந்த வாரம் தொடங்கிய இந்தப் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்தின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார். மேலும், ஈரான் ராணுவ முகாம்கள் மற்றும் அணுசக்தி சார்ந்த திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களையும் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு தாக்கி வருகின்றன. ஈரானில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இன்று (மார்ச் 6) அறிவித்தன. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவம் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் என ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளன.
சீனா தயார்:
முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறும்போது, “அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது.
போரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் உட்பட வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களுடன் சீன அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடியுள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தை, சீனா ஆதரிக்கும். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்சிப்பதில் மற்ற வளைகுடா நாடுகளையும் சீனா ஆதரிக்கும்” என்றார் அவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.